டாஸ்மாக்கில் மீண்டும் அதிரடி.. ரூ.10 காலி மதுபாட்டில் பெறும் திட்டம்.. விரைவில் எல்லா மாவட்டத்திலும்
சென்னை: டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், 10 மாவட்டங்களில் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ள நிலையில், மற்ற மாவட்டங்களிலும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லறை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. குடிமகன்கள் மது குடித்துவிட்டு, அந்த காலி பாட்டில்களை சாலைகளில் வீசிச் சென்றுவிடுகிறார்கள். இதனால், கால்நடைகள் மட்டுமின்றி, மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

வனப்பகுதிகள்: எனவேதான், தமிழகத்தின் வனப்பகுதிகளிலும், மலைப்பிரதேசங்களிலும் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவும், பாட்டில்கள் குத்தி வனவிலங்குகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் டாஸ்மாக் தரப்பில் புதிய முறை செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, ரூ.10 கூடுதலாக தந்து, மதுபான பாட்டில் வாங்கிவிட்டு, அந்த காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளிலேயே திரும்ப ஒப்படைக்கும்போது, 10 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.. இந்த திட்டமானது, வனவிலங்குகள் நிறைந்த மலைப்பகுதிகளின் டாஸ்மாக் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய திட்டம்: பிறகு நீலகிரி தவிர்த்து, பெரம்பலுார், கோவை, நாகை, திருவாரூர், தர்மபுரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள, டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறப்படுகின்றன. அதன்படி, மதுபாட்டில் விற்கப்படும் போது, கூடுதலாக, 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனிடையே, டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை, தமிழகம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டும் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது,
எனவே, காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தினை விரிவுபடுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.. இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் விரைந்து செயல்படுத்தும் பணியில், டாஸ்மாக் நிர்வாகம் மிக தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
காலி பாட்டில்கள்: இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "இந்த மாதம் முதல், அனைத்து மாவட்ட மதுக்கடைகளிலும் காலி பாட்டில்கள் திரும்ப பெறப்பட இருந்தது. மழை உள்ளிட்ட காரணங்களால், வரும் ஜனவரியில் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், வனவிலங்குகளுக்கு தீங்கு ஏற்படாது என்று நம்பப்படுகிறது.. அத்துடன், இப்படி திரும்ப பெறும் பாட்டில்களை விற்பதன் மூலம் அரசுக்கு ரூ.250 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது..
இடமில்லை: ஆனால், மதுபான பாட்டில்களை வாங்கிய அதே நாளில், அதே கடையில், கஸ்டமர்கள் திருப்பி கொடுத்து ரூ.10 பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், கஸ்டமர்களுடன் தேவையற்ற மோதல் ஏற்படுவதாகவும், காலி பாட்டில்களை வாங்கி இருப்பு வைக்க, டாஸ்மாக் கடைகளில் இடமும் இருப்பதில்லை என்பதால், இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications