வேனுக்குள் தள்ளி ஆசிரியர் கையை உடைத்த போலீசார்? சென்னையில் ஷாக்! வெடிக்கும் போராட்டம்!
சென்னை: ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்தபோது, ஆசிரியர் ஒருவரின் கைய போலீசார் உடைத்ததாக சலசலப்புகள் கிளம்பியுள்ளன.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 39ம் தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை ஊதியமும் வேறுபட்டு இருப்பதே தற்போதைய ஆசிரியர்களின் போராட்டத்திற்கு காரணமாகும்.

மே மாதம் 31ஆம் தேதி வரை நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, அடிப்படை ஊதியமாக ரூ.8,370 வழங்கப்பட்டது. இதுவே ஜூன் 1ம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, அடிப்படை ஊதியமாக வெறும் ரூ.5,200 மட்டுமே வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த ஊதிய முரண்பாடு ரூ.3,170 என்று இருந்த நிலையில், தற்போது ரூ.16,000 என்கிற அளவில் மாறி இருக்கிறது.
இந்த ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று, கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சமயத்தில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் களையப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தது. இந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரிதான் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்ணாவிரதம், மறியல், காத்திருப்பு போராட்டம் என்று அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள், தற்போது சென்னையில் போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற போது, ஆசிரியர் ஒருவரின் கை உடைந்ததாக சக ஆசிரியர்கள் கொந்தளித்துள்ளனர்.
போராடிய ஆசிரியர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றும் போது, காவலர்கள் தாக்கியதால் ஆசிரியர் ஒருவரின் கை உடைக்கப்பட்டு இருப்பதாக சக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கேட்டால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கையை உடைப்பதுதான் ஜனநாயகமா? என்றும் ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பி முழக்கமிட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவரின் கை உடைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல், சக ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications