மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம்.. 4 முக்கிய நிறுவனங்கள் டெண்டரில் ஆர்வம்.. ஆஹா நோட் பண்ணுங்க!
சென்னை: 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பின்படி, 20 லட்சம் லேப்டாப்-களை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசின் எல்காட் நிறுவனம் கோரியது. இந்த சர்வதேச டெண்டரில் கலந்து கொள்வதற்காக லெனோவா, எச்பி, ஏசர் மற்றும் டெல் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் பயன்பாட்டுக்காக தமிழக அரசு தரப்பில் இலவச லேப்டாப் திட்டம் 2011ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலமாக லட்சக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்தனர். இதன் மூலமாக ஐடி துறை மீதான ஆர்வமும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்தது.

இலவச லேப்டாப்
ஆனால் 2018ஆம் ஆண்டுக்கு பின் இலவச லேப்டாப் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார சிக்கலால், அதிமுக ஆட்சியில் இலவச லேப்டாப் திட்டம் நிறுத்தப்பட்டது. இதனை திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தொடங்க வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
20 லட்சம் லேப்டாப்
இந்த நிலையில் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் போது மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியது. அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு தரப்பில் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவையென்றால் கூடுதல் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறி இருந்தார்.
ரூ.20 ஆயிரம் மதிப்பு
அதுமட்டுமல்லாமல் ஒரு லேப்டாப் மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்று அதிமுக தரப்பில் கேட்கப்பட்ட போது, ரூ.20 ஆயிரம் மதிப்பில் 20 லட்சம் லேப்டாப்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தங்கம் தென்னரசு பதில் அளித்தார். இது மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 20 லட்சம் லேப்டாப் கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை எல்காட் நிறுவனம் வெளியிட்டது.
எப்படி இருக்கும் லேப்டாப்?
அதேபோல் இலவச லேப்டாப் 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஹார்ட் டிஸ்க், 14 அல்லது 15.6 இன்ச் திரை, ப்ளூடூத் 5.0, 5 மணி நேரம் வரை தாங்கும் 4 அல்லது 6 செல் லித்தியன் அயன் பேட்டரி, லேப்டாப்பின் முன்புறம் 720p ஹெச்டி கேமரா, விண்டோஸ் 11 உள்ளிட்ட செயல்திறன் கொண்டதாக வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. லேப்டாப்களுக்கு 1 ஆண்டு வாரண்டி மற்றும் சர்வீஸ் செண்டர் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வீஸ் சென்டர்
கடந்த முறை அளிக்கப்பட்ட லேப்டாப்களை தனியார் சர்வீஸ் செண்டர்களில் மாணவர்கள் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனை களையும் வகையில் டெண்டரின் போதே லேப்டாப் சர்வீஸ் மற்றும் வாரண்டி தேவை என்பதிலும் தமிழக அரசு கவனமாக உள்ளது. இந்த நிலையில் பன்னாட்டு லேப்டாப் டெண்டரில் கலந்து கொள்வதற்காக ஏராளமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது.
4 நிறுவனங்கள் ஆர்வம்
பன்னாட்டு நிறுவனங்களான டெல், ஏசர், லெனோவா, எச்பி உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சந்தையில் இந்த நிறுவனங்களின் லேப்டாப் அதிகபட்ச விலையில் தரமானதாக இருந்து வரும் நிலையில், டெண்டர் பணிகள் ஜூலை 9ஆம் தேதி இறுதி செய்யப்பட உள்ளது. இதன்பின் விரைவில் மாணவர்களுக்கு லேப்டாப் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications