மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தான் வாழ்க்கை -உற்சாக மூட்டிய ஆளுநர் தமிழிசை
Recommended Video
சென்னை: பெண்கள் தோல்விகளை கண்டு துவண்டு விடக்கூடாது என்றும், துணிச்சலாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கே வாழ்க்கை எனவும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பாரதி விழாவில் பேசும் போது இதனைக் கூறினார்.
பாரதியார் அளவுக்கு வேறு யாரும் பெண்மையை போற்றியும், பெண்ணை உயர்த்தியும் கவிதை வடித்திருக்க முடியாது எனத் தெரிவித்தார்.

புகழாரம்
பெண்ணை சக்ரவர்த்தியாக சித்தரித்து ''சக்கரவர்த்தினி'' என்ற மிகப்பெரிய பட்டத்தை சூட்டியவர் பாரதியார் என புகழாரம் சூடினார். வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகளை கண்டு அஞ்சி ஓடாமல், அதிலிருந்து நல்ல பாடங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் எனப் பேசினார். மேலும், சமுதாயத்தில் எல்லா பெண்களும் நல்ல நிலையில் உள்ளார்கள் எனக் கூறமுடியாது என்றும், இன்றும் பலர் முன்னேறமுடியாத சூழலில் இருக்கிறார்கள் என வேதனைத் தெரிவித்தார்.

கனவு மெய்ப்படும்
பெண்கள் தம்மை அடக்குபவர்களை தலைநிமிர்ந்து எதிர்க்கத்துணிய வேண்டும் எனப் பேசிய ஆளுநர் தமிழிசை, பெண்களை இரும்புபிடி போல் பலர் சித்தரிப்பதாக தெரிவித்தார். பாரதியாரின் வரிகளை நினைவுகூர்ந்து, வீழ்வேன் என நினைக்காமல் எழுவேன் என நினைத்து பெண்கள் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், அப்போது தான் கனவு மெய்படும் எனக்கூறினார்.

பாரதி வரிகள்
சிறிய தோல்விகளுக்காகவும், கவலைக்களுக்காகவும் பெண்கள் தற்கொலை முடிவை எடுக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்த ஆளுநர் தமிழிசை, துணிச்சலாக எதையும் எதிர்க்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தான் என்றும், பாரதியாரின் பாடல் வரிகளின் படி பெண்கள் உறுதுபூண்டு துணிச்சலாக இருக்க வேண்டும் எனப் பேசினார்.

தன்னம்பிக்கை
தெலுங்கானா ஆளுநராகிய பின்பு தமிழகத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்ற முதல் கூட்டம் என்பதால் அவர் என்ன பேசுவார், எதைப்பற்றி பேசுவார் என செய்தியாளர்கள் மத்தியில் ஆவல் ஏற்பட்டது. ஆனால் அவர் முழுக்க முழுக்க பாரதியாரின் பெருமைகளையும், பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும் தனது உரையை நிகழ்த்தினார்.












Click it and Unblock the Notifications