திமுகவில் சிக்கல்.. "ரூ.1 கோடி.. பணமிருந்தால்தான் முடியுமா?".. முதல்வர் ஸ்டாலினிடம் இளைஞர் கேள்வி
தலித் பெண் சேர்மன் செல்லம்மாள் மகன் வீடியோ வெளியிட்டுள்ளார்
சென்னை: "பணமிருந்தால்தான் அரசியலில் இருக்க முடியுமா?.. எங்களிடம் கோடி ரூபாய் கேட்டாங்க... அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள் மகன் முதல்வர் ஸ்டாலினுக்கு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மற்றும் மறைமுக தேர்தலில் வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சி தலைவர்கள் யூனியன் சேர்மன்கள் கிராம ஊராட்சி துணைத் தலைவர்கள் ஆகியோர் சமீபத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதில், தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒருசில பிரச்சனைகள் வெடித்தன.. இங்கு மொத்தம் 17 வார்டுகள் இருக்கின்றன.. இதில் 13வது வார்டில் வெற்றி பெற்றவர் ஜெயக்குமார்.. 10வது வார்டில் வெற்றி பெற்றவர் செல்லம்மாள்.. இருவருமே திமுகவை சேர்ந்தவர்கள்.. இருவருமே ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

மாவட்ட திமுக
ஆனால், அதிமுக ஆதரவுடன் செல்லம்மாள் 13 ஓட்டுகள் பெற்று ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக அதாவது யூனியன் சேர்மமான தேர்ந்தெடுக்கப்பட்டார்.. இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெயக்குமார் வெறும் 4 ஓட்டுக்கள் மட்டுமே பெற்ற நிலையில், மாவட்ட திமுக தலைமையோ, ஜெயக்குமாரை ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்க முடிவு செய்ததாக கூறப்பட்டது.

செல்லம்மாள்
இதற்கு காரணம், கடையம் திமுக ஒன்றிய செயலாளர் குமார் என்பவர், தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி செல்லம்மாளை வெற்றிபெற செய்ததாக சொல்லப்பட்டது.. குமாரையும் பொறுப்பில் இருந்து திமுக தலைமை நீக்கியது... இப்படிப்பட்ட சூழலில்தான், சேர்மன் செல்லம்மாளிடம் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக மற்றொரு செய்தி வெளிவந்தது... இந்த மிரட்டலுக்கு பயந்துபோய், செல்லம்மாள் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

பேட்டி
ஆனால், என்ன விவரம் என்று எதுவுமே சொல்லாமல், "திமுகவில் நடக்கும் நடக்கும் உள்கட்சி பூசல் காரணமாக நான் ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.. வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை" என்று செல்லம்மாள் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.. ஆனால், அந்த சமயம் ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி இருந்தது..

ஒரு கோடி ரூபாய்
அதில் ஒருவரிடம் செல்லம்மாள் பேசுகிறார், "என்கிட்ட ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் தந்துடுங்கன்னு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கேட்கிறார்... என்கிட்ட அவ்வளவு பணம் எங்கே இருக்கு? அதனால் தான் ராஜினாமா செய்தேன்" என்று சோகத்துடன் பேசுவது பதிவாகி இருந்தது. இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. ஏனெனில், கடையம் ஊராட்சி ஒன்றியம், இந்த முறை தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது.. அதனால்தான், அதே சமூகத்தை சேர்ந்த செல்லம்மாள் சேர்மன் ஆக தேர்வு செய்யப்பட்டார்...

மகன் வீடியோ
செல்லம்மாளை பொறுத்தவரை வேறு எந்த பின்புலமும் இல்லாதவர்.. பணபலமும் அவருக்கு இல்லை.. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சேர்மனிடம் திமுக மாவட்ட செயலாளர் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டி, செல்லம்மாளை ராஜினாமா செய்ய வைத்ததாக கூறப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை அரசியல் களத்தில் உண்டுபண்ணியது, இப்படிப்பட்ட சூழலில்தான், மற்றொரு வீடியோ வெளியாகி உள்ளது.. செல்லம்மாள் மகன் வெள்ளிகுளம் சதன் என்பவர்தான் அந்த வீடியோவில் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து பேசியுள்ளார்.

பதவி
வீடியோவில் அவர் சொல்லியிருப்பதாவது மாண்புமிகு தளபதி அவர்களுக்கு, கடையம் ஆதிதிராவிட நலஉறுப்பினர் வி.எஸ்.முருகேசன் மகன் சதன்... எங்க அம்மா கடையம் யூனியன் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்... ஜெயக்குமாரும் அதே பதவிக்கு போட்டியிட்டார். மக்கள் ஆதரவு தந்தாங்க.. இதற்கு யாருமே சம்பந்தம் கிடையாது.

அப்பா
என் அப்பா 35 வருஷமாக திமுகவில் இருக்கிறார்.. அவர் 30 வருஷம் போஸ்டர் ஒட்டினார்... நானும் எங்கள் தளபதிக்காக 10 வருடம் போஸ்டர் ஒட்டினேன்... நாங்களும் கட்சிக்காக உழைத்துள்ளோம்.. நாங்களும் கஷ்டப்பட்டவங்கதான்.. எங்கள் பகுதியில் எஸ்சி தொகுதியாக ஒதுக்கப்பட்ட காரணத்தினால் நாங்கள் போட்டியிட்டோம்.. ஜெயக்குமாரும் எங்கள் சமுதாயத்தை சார்ந்தவர்தான்.. இவர் அதிகமாக மோசடி செய்ததால் மக்கள் எங்களை தேர்ந்தெடுத்தனர்...

அதிர்ச்சி
மாவட்ட செயலாளர் எங்களிடம் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பணம் கேட்கிறார்... அதனால் முதல்வர் இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது... ஏற்கனவே செல்லம்மாள் பேசிய வீடியோ அதிர்ச்சியை தந்த நிலையில், அவரது மகனும் வெளியிட்ட இந்த வீடியோ திமுகவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications