அதிமுக பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கம்! தேடி தேடி வந்து ஆப்பு வைத்த ஆர்எஸ்எஸ்
சென்னை: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது கட்சியின் கோட்பாடுகள், சட்டத்திட்டங்களுக்கு முரணாக செயல்பட்டதால் தளவாய் சுந்தரம், அதிமுக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் ஆர்எஸ்எஸ் பேரணியை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்ததால் இந்த நடவடிக்கை எடுத்திருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், டெல்லியின் தமிழக பிரதிநிதியாக பொறுப்பு வகித்தவர் தளவாய் சுந்தரம். தொடர்ந்து 20 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை வாங்கிக் கொடுக்க முக்கிய காரணியாக இருந்தவரும் தளவாய் சுந்தரமே. எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி உத்தரவால் மூத்த நிர்வாகிகள் கலங்கியுள்ளனர். ஆர்எஸ்எஸ், பாஜகவுடன் தளவாய் சுந்தரம் நெருக்கம் காட்டி வருகிறார் என்பதை காட்டிலும் அவர்கள்தான் இவருடன் தேடி வந்து நெருக்கம் காட்டுவதாக உள்ளூர் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications