2 கிராம் தங்கம் வாங்க முடியாத உனக்கு கல்யாணம் ஏன்? மானங்கெட்ட பொழப்பு.. 3 பவுன் நீ போடு: சீமான்
சென்னை: தஞ்சாவூர் தேர்தல் பிரசாரத்தில் தாலிக்கு தங்கம் திட்டத்தை விமர்சித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய ஆக்ரோஷமான பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.. தன்மானம் மற்றும் தற்சார்பு வாழ்க்கை குறித்து சீமான் வெளியிட்ட இந்த சர்ச்சை கருத்துக்கள் இப்போது சோஷியல் மீடியாவில் பேசுபொருளாக மாறியுள்ளன.. 2 கிராம் தங்கம் கூட வாங்க முடியாதவர்களுக்கு திருமணம் தேவையா என சீமான் கேள்வி எழுப்பியது பொதுமக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது
திருமண வயது கடந்தும் பல பெண்கள் திருமணம் செய்யாமல் இருக்கும் நிலையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அதிமுக ஆட்சிக் காலத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.

தாலிக்கு தங்கம் திட்டம் என்று பொதுமக்களால் அழைக்கப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தில், திமுக அரசும் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்தது..
தாலிக்கு தங்கம் திட்டம்
கடந்த 2021ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இந்தத் திருமண நிதியுதவித் திட்டத்தை "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்" என மாற்றம் செய்தது.. இதன்படி, திருமணத்திற்குத் தங்கம் வழங்கும் நடைமுறைக்கு மாற்றாக, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் "புதுமைப் பெண்" திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது..
ஏழை எளிய வீட்டுப் பெண்கள் திருமண உதவித் தொகையைவிட, கல்வி பயின்று சுயமாக முன்னேற வேண்டும் என்ற நோக்கில் இந்த நிதி வழங்கப்படுவதாக திமுக அரசு விளக்கம் அளித்தது.. தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான கல்லூரி மாணவிகள் மாதந்தோறும் தங்களின் வங்கிக் கணக்கில் 1,000 ரூபாயைப் பெற்று வருகிறார்கள்.. திருமண உதவித் தொகையை உயர்கல்விக்கான ஊக்கத்தொகையாக மாற்றியதே இந்தத் திட்டத்தில் திமுக செய்த முக்கிய நடவடிக்கையாகும்..
அதிமுக எடப்பாடி பழனிசாமி
ஆனால், தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக நிறுத்திவிட்டதாகவும் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூறி வருகிறார்..
அதுமட்டுமல்லாமல், பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி திட்டம் ஆகியவை தொடரும் எனவும் திருமண உதவி திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தாலிக்கு தங்கம் திட்டத்துடன் சேர்த்து விலையில்லா பட்டு வேட்டி சட்டை பட்டு சேலைகள் வழங்கப்படும் எனவும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நாம் தமிழர் கட்சி சீமான்
எனினும், நாம் தமிழர் கட்சி சீமான், இந்த திட்டத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.. "மாறி மாறி ஆட்சி அமைத்தவர்கள் யாரேனும் சாராயக் கடைகளை மூடுவேன் என்று வாக்குறுதி அளித்தார்களா? தாலிக்குத் தங்கம் கொடுப்பதாக சொல்பவர்கள், குடிக்க வைத்து அந்த தாலியை அவர்களே அறுக்கிறார்கள். அப்படி தாலி அறுக்கிற கூட்டத்துக்குத்தான் பொதுமக்கள் தொடர்ந்து அதிகாரத்தை கொடுக்கிறார்கள்" என்றும் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி வருகிறார்.
இந்நிலையில், தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, "ஒருத்தன் வந்து தாலிக்கு தங்கம் தர்றான்னு கை தட்டுறீயே. ஏன்டா உன் பொண்டாட்டி கழுத்துல, நீ காசு கொடுத்து சம்பாதிச்சு தாலி கட்ட முடியலைன்னா, ஒரு பிள்ளை கழுத்துல அரை பவுன் தாலி கட்ட முடியாத உனக்கு எதுக்குடா பொண்டாட்டி பிள்ளை? எதுக்குடா இந்த மானங்கெட்ட வாழ்வு?
கால் பவுன் தாலி
ஏன்டா ஒரு கால் பவுன் தாலி வாங்கி கட்ட முடியாத நீ, என் பிள்ளைய வச்சு கட்சி வளர்க்கப் போறீயா? என்னடா மானங்கெட்ட பொழப்பு? உனக்கு பொண்டாட்டி கட்ட இன்னொருத்தன் தங்கம் தர்றானேடா!
டேய், தன்மானத்தோடு பொழைக்கப் பாருடா... நான் அண்ணன் சீமான் தான். சம்பாதிச்சு ஒரு பவுன் இல்ல, 9 பவுன்ல தாலிய கட்டுடான்னா கட்டுறான். தன்மானத்தோடு தமிழன் தலைநிமிர்ந்து தற்சார்பு வாழ்க்கை வாழணும். யார் காலையும் சாராமல்.
நீ பெத்த பிள்ளைக்கு நீதான்டா மோதிரம் போடணும். ஊரான் கொடுத்ததை போடாதே. நீ பிள்ளைய கூட்டிட்டு வா, கர்ப்பமான பிள்ளைய சொல்லு, நானே கூட்டிட்டு வந்து மருத்துவம் பார்ப்பேன். பிரசவம் பார்ப்பேன். ஒரு ரூபாய் செலவு இல்லை. தனியார் கிட்ட போனால், 3 லட்சம் ரூபாய் பறிச்சிருப்பான். அந்த 3 லட்சம் ரூபாய் உனக்கு மிச்சம். அந்த 3 லட்சம் ரூபாய வச்சு நீ 3 பவுன்ல கூட மோதிரம் போடு உன் பிள்ளைக்கு" என்றெல்லாம் பேசியிருக்கிறார்..!!!












Click it and Unblock the Notifications