அத்திவரதரை தரிசிக்க அன்சாரி தந்த லெட்டர்.. மதங்களை தாண்டி வென்ற மனிதம்!
அத்திவரதரை தரிசிக்க தமீமுன் அன்சாரி சிபாரிசு கடிதம் தந்தார்
சென்னை: அத்திவரதரை தரிசிக்க தமீமுன் அன்சாரி கொடுத்து உதவும் பரிந்துரை பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகிறது.
கடந்த 1-ம் தேதி முதல் அத்திவரதர் முதலில் படுத்த கோலத்திலும், தற்போது நின்ற கோலத்திலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அன்று முதல் இன்று வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் விடிகாலையிலேயே குவிந்து விடுகின்றனர்.

ஒவ்வொரு நாளும், கூட்ட நெரிசலில் முண்டியடித்து கொண்டு, அத்திவரதரை தரிசிப்பதால், பக்தர்கள் சிலர் மயக்கம் உள்ளிட்ட தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டனர்... ஏன் உயிர்பலியும் ஏற்பட்டுள்ளது.
இப்போது இந்த தரிசனம் காண சில தினங்களே இருப்பதால் தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் காஞ்சிக்கு வருகை தர ஆர்வமாக உள்ளனர். ஆனால் கூட்ட நெரிசல் செய்திகளை கேள்விப்பட்டதுமே, தொலைதூர மாவட்ட மக்களுக்கு பீதி ஏற்பட்டுவிடுகிறது. எப்படியும் தரிசனம் செய்ய ஸ்பெஷல் பாஸ் கிடைக்காது என்பதல், அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களின் சிபாரிசு கடிதங்களை முடிந்த அளவு பெற்று செல்கிறார்கள்.
அந்த வகையில், நாகப்பட்டினம் மற்றும் சிக்கலை சேர்ந்த இளைஞர்களும் எம்எல்ஏ தமீமுன் அன்சாரியிடம் சென்று, தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுள்ளனர். ரோட்டோர கடையில் அன்சாரியை பார்த்ததுமே இளைஞர்கள் உரிமையுடன் சென்று இவ்வாறு கேட்டனர். உடனே அன்சாரியும், தனது லட்டர் பேடை எடுத்து, பரிந்துரை கடிதம் எழுதி அவர்களிடம் தந்தார். அதை பெற்றுக் கொண்ட இளைஞர்கள் மகிழ்ச்சி பெருக்க நன்றி தெரிவித்துவிட்டு சென்றனர்.
தன் தொகுதியை சேர்ந்த இந்து பக்தர்களுக்கு அத்திவரதர் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்த அன்சாரியின் இந்த செயல் பாராட்டை பெற்று வருகிறது.. மதங்களையும் தாண்டி நிற்பதுதான் மனிதம்!












Click it and Unblock the Notifications