ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை! நீதிபதி ஆதிநாதன் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன? -தமிமுன் அன்சாரி
சென்னை: ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை விவகாரத்தில் இதுவரை நீதிபதி ஆதிநாதன் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வினவியுள்ளார்.
ஆதிநாதன் ஆணையம் அமைக்கப்பட்டு 8 மாதங்கள் ஆவதாகவும் அதன் முகவரிக்கு தாம் ஒரு கடிதம் அனுப்பிய போது அந்த முகவரியில் அப்படியொரு ஆணையமே இல்லை என தனக்கு கடிதம் திரும்பி வந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும், ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை தொடர்பாக பேச இந்த ஆணையம் ஒரு முறையாவது கூடியதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொள்ளாச்சியில் அதே பிரம்மாண்டம்! அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை கையிலெடுக்கும் எஸ்.பி.வேலுமணி!
தலைமைச் செயலகம்
ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் செப்டம்பர் 10 ஆம் தேதி தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற நிலையில் அதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, ஆதிநாதன் ஆணையத்தின் செயல்பாடுகள் பற்றி பேசினார்.
ஆயுள் சிறைவாசிகள்
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ''10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் என தமிழக சிறைகளில் வாடும் சிறைவாசிகளை, அண்ணா பிறந்த நாளை யொட்டி சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் கடந்த ஜனவரி 8 அன்று இதே கோரிக்கைக்காக கோவை சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். இப்போராட்டத்தை அறிவித்த நேரத்தில், தமிழக அரசு நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் ஒரு ஆணையத்தை இது தொடர்பாக அறிவித்தது.''
8 மாதங்கள்
''8 மாதங்கள் கழிந்த நிலையில், இந்த ஆணையம் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? ஒரு முறையாவது கூடியதா? நாங்கள் இந்த ஆணையத்திற்கு அனுப்பிய கோரிக்கை கடிதம் , இந்த முகவரியில் ஆணையம் இல்லை என திரும்பி வந்து விட்டது.இந்த ஆணையம் ஒரு ஏமாற்று வேலையா? என சிறைவாசிகளின் குடும்பங்கள் கருதுகிறார்கள்.''
செப்டம்பர் 10
''இந்த நிலையில்தான் இக்கோரிக்கையை அரசுக்கு மீண்டும் கவனப்படுத்துவதற்காக, கோரிக்கையை வலிமைப்படுத்துவதற்காக , அண்ணா பிறந்த நாளைக்கு முன்பாக செப்டம்பர் 10 அன்று சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட உள்ளோம்.'' இவ்வாறு அவர் கூறினார்.