தமிமுன் அன்சாரி குறி வைக்கும் முக்கியமான தொகுதி.. சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் களம்!
சென்னை: மனிதநேய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் தமிமுன் அன்சாரி, வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இப்போதே தொகுதிகளை அடையாளம் காணும் பணிகளில் மும்முரமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் முக்கியமான தொகுதி ஒன்றை குறிவைத்துள்ளாராம்.
கடந்த 2016 -2021 காலக்கட்டத்தில் நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் தமிமுன் அன்சாரி. கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த அவர், இன்று வரை திமுக ஆதரவு குரலாக ஒலித்து வருகிறார். தமிமுன் அன்சாரியை அதிமுக கூட்டணியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி எவ்வளவோ முயன்றும் அவர் அசைந்து கொடுக்கவில்லை.

இதனிடையே வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் களமிறங்கும் திட்டத்துடன் தமிமுன் அன்சாரி காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியை மையமாக வைத்து கடந்த 6 மாதங்களாக கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை அதிகளவில் நட த்தி வரும் தமிமுன் அன்சாரி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இருவரிடமும் நட்புறவு பேணி வருகிறாராம்.
திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் சிறுபான்மையினர் வாக்கு வங்கி கணிசமாக உள்ளதால் இங்கு களம் காண கடும் முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாகையில் போட்டியிடும் எண்ணம் தமிமுன் அன்சாரிக்கு இல்லை எனக் கூறும் அவரது கட்சி நிர்வாகிகள், திருச்சி கிழக்கு அல்லது தஞ்சை தொகுதியில் போட்டியிட வேண்டும் என தாங்கள் விரும்புவதாகவும் கூறுகிறார்கள்.
இதனிடையே திமுக தலைமையின் குட் புக்கிலும் இடம்பெற்றிருப்பதால் விரும்பும் ஒரு தொகுதியை கேட்டுப் பெறுவதில் தமிமுன் அன்சாரிக்கு பெரும் சிக்கல் ஏதும் இருக்காது எனத் தெரிகிறது. வரும் தேர்தலில் இஸ்லாமியர்கள் அடர்த்தியாக வாழும் தொகுதிகளில் தமிமுன் அன்சாரியை வைத்து பரப்புரை மேற்கொள்ளும் திட்டமும் திமுகவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
திருச்சி கிழக்கு தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏவாக இனிகோ இருதயராஜ் இருந்து வருகிறார். இந்நிலையில், அந்த தொகுதியை தமிமுன் அன்சாரிக்கு திமுக வழங்குமா அல்லது சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் வேறு தொகுதி எதனையும் வழங்குமா என்ற விவாதம் அரசியல் களத்தில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications