''நீட் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆணவப்போக்கு''! கருப்பு தலைப்பாகை அணிந்து மஜக போராட்டம்!
சென்னை: நீட் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆணவப்போக்குடன் நடந்துக் கொள்வதாக கூறி மஜக சார்பில் கருப்பு தலைப்பாகை அணிவித்து போராட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய தமிமுன் அன்சாரி, ஆளுநர் ரவி ஆணவத்துடன் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நெவர், எவர் என்று பேச அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் சாடினார்.

மேலும், இதில் பங்கேற்ற தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மாணவர் ஜெகதீசும், அவரது தந்தையும் தற்கொலை செய்துக்கொண்டதற்கு காரணம் ஆளுநரின் ஆணவமான பேச்சுதான் என கருதி அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட MLA க்கள் கூடி சட்ட சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை எதிர்க்கும் அதிகாரம் இவருக்கு வந்தது எப்படி? என்றும், இது ஆளுநரின் ஆணவத்தை தான் காட்டுகிறது என்றும் அனல் கக்கினார். அவரும் ஆளுநர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரன் பேசும் போது, நீட்டுக்கு எதிரான மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன் என்ற அதிகாரத்தை ஆளுநருக்கு எந்த சட்டம் வழங்கியிருக்கிறது என வினவினார்.
நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் சகோதரர் மணிரத்னம் பேசும்போது, NEET க்கு எதிரான அனிதாவின் உயிர் தியாகம் வீணாகாது என்றார். போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கருப்பு துணியால் முண்டாசு கட்டி எதிர்ப்பை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications