மதுரையில் மருதநாயகத்துக்கு மணிமண்டபம்... முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கும் தமிமுன் அன்சாரி..!
சென்னை: மதுரையில் மருதநாயகத்துக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி.
மேலும், சென்னை பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல்ரஹ்மான் பெயரில் நவீன தமிழ் இலக்கியத்திற்கான இருக்கை ஒன்றையும் அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின் போதும் இந்த இரண்டு கோரிக்கைகளை தமிமுன் அன்சாரி முன்வைத்தார். ஆனால் இவரது கோரிக்கை மீது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்த உறுதியும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. .

தமிமுன் அன்சாரி
நாகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவருமான தமிமுன் அன்சாரி கட்சி வளர்ச்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். மாவட்டந்தோறும் பயணம் மேற்கொண்டு கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்தி வரும் அவர், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் முஸ்லீம் லீக், மமக, ஆகிய கட்சிகளுக்கு இணையாக தனது கட்சியிலும் நிர்வாகிகள் நியமனம், ஆலோசனை என பரபரத்தார்.

பாராட்டு
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சரை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் 3 கோரிக்கைகளையும் முன்வைத்தார். அவர் கூறியதாவது, ''தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் இருக்கிறது. சமீப காலமாக தமிழக சட்டசபையில் நாகரீகமான முறையில் விவாதங்கள் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.''

மருதநாயகம்
''சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து வரும் தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது. அதேவேளையில் மக்கள் கவனத்திற்கு வராத விடுதலை தியாகிகளையும் அரசு சிறப்பிக்க வேண்டும். அந்த வகையில் மதுரையை தலைமையிடமாக கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட மருதநாயகத்தை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு மதுரையில் நூலக வசதியோடு மணிமண்டபம் கட்ட வேண்டும்.''

கவிக்கோவுக்கு சிறப்பு
''இதேபோல் தமிழுக்கும், தமிழகத்திற்கும் சிறப்பு சேர்த்த பிரபலங்களில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு, அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் அவரின் பெயரால் நவீன தமிழ் இலக்கியத்திற்கான இருக்கை ஒன்றை தமிழக அரசு உருவாக்க வேண்டும். மேலும், சென்னையில் உள்ள காயிதே மில்லத் மணிமண்டபம் பயன்பாடற்ற முறையில் இருக்கிறது. அதை மக்கள் தொடர்போடு இருக்கும் வகையில் அதில் நூலகம் ஒன்றையும், விழா மண்டபம் ஒன்றையும் அமைக்க வேண்டும்.''

உள்ளாட்சித் தேர்தல்
இதனிடையே எதிர்வரும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அணியில் தமிமுன் அன்சாரி இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவை நிகழ்வுகள் கண்ணியமாக நடைபெறுவதாகவும், முதலமைச்சரின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் உள்ளதாகவும் அவர் தொடர்ந்து புகழாரம் சூட்டி வருவது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications