திமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரி? சூடுபிடிக்கும் அரசியல்! நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விறு விறு!
சென்னை: திமுக கூட்டணியில் புது வரவாக தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியை இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுகிறதாம்.
தேனி, கோவை, ஈரோடு, தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், மாவட்டங்களில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு வலிமையான கட்டமைப்புகளும், தளகர்த்தர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சீட் வழங்கப்படாத நிலையிலும், அந்தக் கூட்டணிக்காக பரப்புரை செய்தவர் தமிமுன் அன்சாரி என்பது கவனிக்கத்தக்கது.

நகர்ப்புற உள்ளாட்சி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இடபங்கீடு பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, முஸ்லீம் லீக், மமக, உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த சூழலில் அந்த கூட்டணியின் புது வரவாக தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியை அதில் அங்கம் பெறச் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

எதற்கும் தயார்
மனிதநேய ஜனநாயக கட்சிக்கு உள்ள தொண்டர் பலத்தை புள்ளி விவரத்துடன் திமுக தலைமைக்கு எடுத்துரைப்பதற்காக அக்கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் திமுக முகாமிற்கு தூது அனுப்பியுள்ளார்களாம். இதனிடையே திமுகவிடம் இருந்து பாசிட்டிவ் ரியாக்ஷன் எதுவும் வரவில்லையெனில் தனித்தே களம் காணவும் தமிமுன் அன்சாரி தயாராக இருக்கிறாராம். அதிமுக தரப்பில் இருந்து வந்த அழைப்பை, அடியோடு நிராகரித்துவிட்டாராம்.

ஆளுங்கட்சி
ஆளுங்கட்சி என்பதால் திமுகவுக்கு யார் தயவும் தேவையில்லை என்றாலும் கூட, அக்கட்சியின் தலைமை அப்படி நினைக்கவில்லையாம். கருணாநிதியை போலவே முடிந்தவரை அனைத்து சிறிய கட்சிகளையும் அரவணைத்து திமுக என்ற குடையின் கீழ் கொண்டுவரவே விரும்புகிறதாம்.

மாவட்ட நிர்வாகம்
இதனிடையே பாஜக அங்கம் பெறாத கூட்டணியில் உள்ளூர் அளவில் தேர்தல் உடன்பாடு செய்து கொள்ளவும் மனிதநேய ஜனநாயக கட்சி தயாராக இருக்கிறது. ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தை முன்னெடுத்து போராட்டம் நடத்தி வரும் தமிமுன் அன்சாரி, திமுக அரசிடம் மென்மையான போக்கை கடைபிடித்து கோரிக்கை வைத்து வருவது கூடுதல் தகவலாகும்.












Click it and Unblock the Notifications