வெளிநாடு வாழ் தமிழர்களை மீட்கக் கோரி... போராட்டத்தை முன்னெடுத்த தமிமுன் அன்சாரி
சென்னை: வெளிநாடு வாழ் தமிழர்களை மீட்கக் கோரி மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி பல்வேறு இயக்கங்களை ஒருங்கிணைத்து பதாகை ஏந்தும் போராட்டத்தை முன்னெடுத்தார்.
தமிமுன் அன்சாரியின் கோரிக்கையை ஏற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய கம்யூ.கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, பழ.நெடுமாறன், உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். அவரவர் வீடுகளுக்கு வெளியே பதாகைகளை ஏந்தியபடி நின்ற அவர்கள், அரசுக்கு கோரிக்கை வைக்கும் வகையில் முழக்கம் எழுப்பினர்.

இந்தப் போராட்டம் நாளை மற்றும் நாளை மறுதினமும் அறவழியில் சமூக இடைவெளியுடன் நடைபெறும் என்றும், அதில் இன்னும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தெரிவிக்கின்றனர். இதனிடையே நாகை மாவட்டம் தோப்புத்துறையில் உள்ள தனது இல்லம் முன்பு பதாகையை ஏந்தி வெளிநாட்டு தமிழர்களை மீட்கக் கோரி தமிமுன் அன்சாரி முழக்கம் எழுப்பினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவுக்கு அந்நிய வருவாயை ஈட்டித்தருவதில் மலையாளிகளுக்கு அடுத்தபடியாக தமிழர்கள் தான் உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் கொரோனா நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வேலையிழந்து ஊர் திரும்ப வழியின்றி தவித்து வருவதாக கூறினார். அவர்களை மீட்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட வாரியத்தை ஒரு IAS அதிகாரியை கொண்டு உயிரூட்ட வேண்டும் என்றும் தமிமுன் அன்சாரி வலியுறுத்தினார். இதனிடையே இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குநர்கள் கவுதமன், களஞ்சியம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜயதரணி உள்ளிட்டோரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications