‘தங்கலான்’ ஒடிடி ரிலீஸ்.. ஒளிபரப்ப தடை இல்லை.. சென்னை ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: 'தங்கலான்' திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் உள்ளிட்ட பலரின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான தங்கலான் இதுவரை ஓடிடி தளத்தில் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், ஓடிடி ரிலீஸுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் வைணவர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும் வைணவத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் விரைவில் ஒடிடியில் வெளியாக உள்ளதாகவும் அவ்வாறு வெளியானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என அவரது மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வு, திரைப்படம் தணிக்கை சான்று பெற்று தான் திரைப்படம் வெளியாகி இருப்பதால் தங்கலான் திரைப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட எந்த ஒரு தடையும் இல்லை என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான படம் 'தங்கலான்'. விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை. இந்நிலையில் 'தங்கலான்' படம் தீபாவளியை முன்னிட்டு Netflix ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.
தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடை கோரி வழக்கு தொடரப்பட்டிருந்ததால் இதுவரை ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் தடை கோரிய வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் தங்கலான் ஓடிடி வெளியீடு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications