105 ஆண்டுகளுக்கு முன்.. இந்தியாவில் முதல்முறை பெரியார் செய்த தரமான சம்பவம்! பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு
சென்னை: தந்தை பெரியார் வழியில் இன்றைய தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்பில் தரமான அறிவிப்பு ஒன்றை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டு உள்ளார். என்ன அது.?
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு கூடிய நிலையில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், "தரமான சாலை வசதிகளை கடைக்கோடி கிராம மக்களும் எளிதில் பெற்றுப் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில், 2.000 கிலோமீட்டர் சாலை மேம்பாட்டுப் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

1919 ஆம் ஆண்டு 105 ஆண்டுகளுக்கு முன்பே காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்து 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் நீர் தேக்கம் செய்து ஈரோடு நகரம் எங்கும் குழாய்களில் பாதுகாப்பு குடிநீர் வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம் செய்து நிகழ்த்திக் காட்டியவர் அன்று ஈரோடு நகர் மன்ற தலைவராக பதவி வகித்த தந்தை பெரியார்.
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று முழங்கி தமிழ் சமூகத்தை வழிநடத்திய தந்தை பெரியார் உள்ளாட்சி அமைப்புகளில் முதன்மை பணியாக பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை முன்னிறுத்தி அத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியவர். அவரது வழியில் நடைபெற்று வரும் திராவிட மாடல் அரசு கடந்த 3 ஆண்டுகளில் ஊரக பகுதிகளுக்கு 46 லட்சம் குடிநீர் இணைப்புகளை வழங்கியதுடன், ரூ.365 கோடி மதிப்பீட்டில் 2000 புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் இந்த ஆண்டு அமைக்கப்படும் என்றார்.
நாட்டிலேயே நகரமயமாக்கம் அதிகம் காணப்படுவது தமிழ்நாட்டில் தான். நகரமயமாதல் என்னும் வளர்ச்சிப் பாதையில் சென்னைப் பெருநகர மாநகராட்சி உள்ளிட்ட பல மாநகராட்சிகளை ஒட்டிய விரிவாக்கப் பகுதிகளுக்குத் தேவையான சாலை வசதிகள், குடிநீர் இணைப்பு மற்றும் தெருவிளக்கு வசதிகள் உருவாக்கித் தர வேண்டியதன் அவசியத்தை இந்த அரசு நன்கு உணர்ந்து உள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு மாநகராட்சிப் பகுதிகளை அடுத்துள்ள விரிவாக்கப் பகுதிகளில், வரும் ஆண்டில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்." என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications