வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்! 3 நிமிடத்தில் ஆக்ஷன்! செந்தில்பாலாஜியை விட தங்கம் தென்னரசு அதிவேகம்!
சென்னை: மின்சாரத்துறையை கூடுதலாக பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு, செந்தில்பாலாஜியை காட்டிலும் துறைரீதியான பணிகளில் அதிவேகமாக செயல்பட்டு கவனம் ஈர்த்து வருகிறார்.
மின்சாரத்துறை சம்பந்தப்பட்ட புகார்கள் மீது செந்தில்பாலாஜி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வந்தது உண்மை தான். ஆனால் அவரைக் காட்டிலும் சில நிமிடங்களுக்குள் புகார்கள் மீது தீர்வுகள் வழங்கி வருகிறார் தங்கம் தென்னரசு.

அமைச்சர் தங்கம் தென்னரசுவின் வேகம் குறித்து தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையம் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''நேற்று காலையில் ஒரு முக்கியமான முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ அனுப்பியிருந்தார். சென்னை அண்ணா நகரில் ரூ.4,000 மின்கட்டணம் கட்டப்போன ஒரு பெண்ணிடம் ஒருநாள் காலதாமதத்திற்காக ரூ.14,000 கட்டவேண்டும் என மின்வாரியம் வற்புறுத்துவதாக கண்ணீர் மல்க புலம்புவதும் அதனைத் தொடர்ந்து ஒருவர் "இதுதான் திராவிட மாடல் அரசு"என கிண்டலடிப்பதும் அந்த வீடியோவில் வந்தது.
அதனை அப்படியே புதிய மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு ஃபார்வர்ட் செய்தேன். மூன்று நிமிடத்தில் அமைச்சர் அதனை கவனிப்பதாக பதில் அனுப்பினார். இன்று காலையில் அமைச்சர் மீண்டும் அழைத்தார்.
சம்பந்தப்பட்ட பெண்ணின் இணைப்புக்கு, கோடைகால மின்பயன்பாடு இருப்பதால் கூடுதல் கட்டணம் வந்துள்ளது. அதன் அடிப்படையில் வைப்புத்தொகை (deposit) கணக்கிட்டு கட்டச்சொல்லியுள்ளனர். ஒரு மாத பயன்பாட்டின் அடிப்படையில் வைப்புத்தொகை வசூலிக்கக் கூடாது என்றும், ஒருவருட பயன்பாட்டின் அடிப்படையில்தான் வசூலிக்க வேண்டும் என்று தாம் உடனடியாக உத்தவிட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தார்.
இதுதான் "திராவிட மாடல் அரசு" அமைச்சருக்கு நன்றியுடன் பாராட்டும்.'' இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அதிவேக நடவடிக்கையை பாராட்டி பதிவிட்டுள்ளார் பீட்டர் அல்போன்ஸ்.












Click it and Unblock the Notifications