இளையராஜா பத்தி இவ்ளோ பேசறீங்களே.. தீராத பிரச்சினை நாட்ல எவ்வளவோ இருக்கு! பேசறீங்களா.. தங்கர் பச்சான்
சென்னை: வேறு எதுவுமே இல்லையா, இளையராஜா கூறிய கருத்து மட்டும்தான் தமிழக மக்களின் முதன்மையான சிக்கலா என இயக்குநர் தங்கர் பச்சான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை கண்டால் அம்பேத்கரே பெருமைபடுவார் என அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார்.
மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். பாரதிராஜாவின் கருத்துக்கு ஆதரவு கருத்துகளும் உள்ளன.
இளையராஜா கருத்தை ஒரு போதும் ஏற்க முடியாது! இந்திய கம்யூனிஸ்ட் மிகத் திட்டவட்டம்!
எம்பி பதவி
இந்த நிலையில் மத்திய அரசு வழங்கும் எம்பி பதவிக்கு ஆசைப்பட்டுதான் இளையராஜா இப்படியொரு பொருத்தமில்லாத ஒப்பீட்டை செய்துள்ளார் என விமர்சனம் எழுந்தது. எனினும் மோடி குறித்த தனது பேச்சை தான் எக்காரணத்தை கொண்டும் வாபஸ் பெற மாட்டேன் என இளையராஜா தெரிவித்துள்ளார்.
வேறெதுமே இல்லையா
இதுகுறித்து இயக்குநர் தங்கர் பச்சான் கூறுகையில் "வேறதுவுமே இல்லையா? இளையராஜா கூறிய கருத்து மட்டும்தான் இப்பொழுது தமிழ்நாட்டு மக்களின் முதன்மையான சிக்கலா? கேள்வி எழுப்பவும், போராடவும், வாதங்கள் புரிவதற்கும் வேறெதுவுமே இங்கே இல்லையா?
திசை திருப்பும் அரசியல் பிழைப்பு
மக்களின் கவனத்தை திசை திருப்பும் அரசியல் பிழைப்புவாதிகளும், ஊடக பிழைப்புவாதிகளும் இதே போன்று மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிலவும், குடிநீர் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, எரி பொருள் விலை உயர்வு, தொடர் மின் வெட்டு, விவசாயிகளின் தீராத சிக்கல்கள், வரி உயர்வு, நீட் போன்ற தீராத முதன்மை சிக்கல்கள் குறித்து இதே போல் இரவும் பகலும் பேசி தீர்வு காண்பீர்களா?" என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஆதரவும் எதிர்ப்பும்
கடந்த சில நாட்களாக இளையராஜா குறித்து ஓயாமல் ஆதரவுகளும் எதிர்ப்புகளும் வருகின்றன. ஏ.ஆர். ரஹ்மான் போல் தமிழ் இனத்திற்கு ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்யுங்கள் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், இளையராஜாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அது போல் இளையராஜாவை விமர்சித்து எதையும் பேசக் கூடாது என திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக உதயநிதி கூறியிருந்தார்.