தஞ்சை களிமேட்டில் நடந்தது தேர் திருவிழா அல்ல.. அரசு அனுமதியும் பெறவில்லை.. சேகர் பாபு விளக்கம்
சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் களிமேட்டில் மக்கள் நடத்தியது தேர் திருவிழாவே அல்ல. அது தேரும் அல்ல, சப்பரம் என கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸிற்கு அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்தார்.
தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில் அப்பர் ஓய்வெடுத்த இடத்தில் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் குருபூஜை விழா வெகு விமரிசையாக 3 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இதுவரை 93 ஆண்டுகள் தேர் பவனி நடந்துள்ளது. 94 ஆவது ஆண்டாக நேற்றைய தினம் குருபூஜை விழா தொடங்கியது. இந்த விழாவில் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

பாரம் தாளாமல் பின்னோக்கி சென்ற தேர்
ஒரு கட்டத்தில் தேரை திருப்பும் போது பாரம் தாளாமல் பின்னோக்கி இழுத்து சென்றது. அப்போது அவ்வழியாக 25 அடி உயரத்தில் சென்ற உயர் மின் கம்பியில் உரசி தேரை பிடித்திருந்த அனைவர் மீதும் மின்சாரம் பாய்ந்து பலியாகிவிட்டனர்.

11 பேர் பலி
இதுவரை மொத்தம் 11 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த மின்சார விபத்து தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ், திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் காலை 11 மணி அளவில் தஞ்சை புறப்பட்டுள்ளார்.

சேகர் பாபு விளக்கம்
இந்த நிலையில் தேர் விபத்து தொடர்பாக இன்று சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களுக்கும் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பொதுவாக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் மீது முதல்வர் விளக்கம் அளித்து பேசுவார். ஆனால் தற்போது முதல்வர் தஞ்சை செல்வதால் அவருக்கு பதில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளிப்பார் என அறிவிக்கப்பட்டது.

அதிமுக வெளிநடப்பு
இந்த நிலையில் சட்டசபை கூடியதும் தேர் திருவிழா விபத்து குறித்து கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸின் மீது உறுப்பினர்கள் பேசினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் தேர் திருவிழாக்களின் போது பாதுகாப்பு அளிக்க வேண்டும். தஞ்சை மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு அளிக்கவில்லை என குற்றம்சாட்டி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Recommended Video

அமைச்சர் சேகர் பாபு கூறியது என்ன?
இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளிக்கையில் தஞ்சை மாவட்டம் களிமேட்டில் நடந்தது தேர் திருவிழா அல்ல. அது தேரும் அல்ல. சப்பர திருவிழா. இந்த சப்பர திருவிழாவை அரசு அனுமதி பெறாமலேயே பொதுமக்கள் நடத்தியுள்ளனர் என அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்தார்.












Click it and Unblock the Notifications