தலைகீழாக மாறிய 169 கணக்கு! திமுகவுக்கு வேட்டு வைத்ததா தவெக? தமிழகத்தை ஆளப்போவது? கசிந்த ரகசிய எண்கள்
சென்னை: எக்ஸிட் போல் முடிவுகளின்படி, மீண்டும் திமுக வெற்றி பெறும் என்றே கணிக்கப்படுகிறது.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படி, திமுக பெயரே டாப் லிஸ்ட்டில் உள்ளது.. அடுத்ததாக, அதிமுக, 3வது இடத்தில் தவெக என வரிசையில் இடம்பிடித்துள்ளன. எத்தனை சதவீத வாக்கு சதவீதத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்பது ரிசல்ட் நாளன்றுதான் தெரியவரும் என்றாலும், இன்றைய செய்தி நிறுவனங்களின் கணிப்புகள் உடன்பிறப்புகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகின்றன
தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் முதல்முறையாக களமிறங்கியுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என 4 முனைப் போட்டி நிலவியதால், தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

எக்ஸிட் போல் - உதயசூரியன்
இந்த பரபரப்பான சூழலில் வெளியாகியுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை ஓரளவுக்குத் தெளிவுபடுத்தியுள்ளன.
இதுவரை வெளியாகியுள்ள பல்வேறு எக்ஸிட் போல் முடிவுகளின் அடிப்படையில், தமிழகத்தில் மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக, சாணக்யா ஸ்ட்ராட்டஜி வெளியிட்டுள்ள கணிப்பின்படி, திமுக கூட்டணி 145 முதல் 160 இடங்கள் வரை கைப்பற்றி தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சில ஆய்வுகளின் ஒட்டுமொத்த தரவுகளைப் பார்க்கும்போது, திமுக கூட்டணி அதிகபட்சமாக 169 இடங்கள் வரை செல்வதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
169 இடங்களில் திமுக?
அதேபோல பீப்பிள் பல்ஸ் நிறுவனத்தின் கணிப்பும் திமுக கூட்டணி 125 முதல் 145 இடங்களைப் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளதால், கோட்டையில் மீண்டும் ஸ்டாலின் அமர்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவைப் பொறுத்தவரை, எக்ஸிட் போல் முடிவுகள் சவாலான ஒன்றாகவே அமைந்துள்ளன. பீப்பிள் பல்ஸ் கணிப்பின்படி அதிமுக கூட்டணி 65 முதல் 80 தொகுதிகளிலும், சாணக்யா ஸ்ட்ராட்டஜி கணிப்பின்படி 50 முதல் 65 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை திமுக 38.4 சதவீதமும், அதிமுக 31.5 சதவீதமும் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை விட அதிமுகவின் வாக்கு வங்கி சில இடங்களில் சரிவைச் சந்திக்கலாம் என்றாலும், பல தொகுதிகளில் திமுகவிற்கு கடுமையான போட்டியை அதிமுக வழங்கியிருப்பதை இந்த எண்கள் காட்டுகின்றன.
X-Factor விஜய்
இந்தத் தேர்தலின் மிகப்பெரிய X-Factor ஆகப் பார்க்கப்பட்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், முதல் தேர்தலிலேயே கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பீப்பிள் பல்ஸ் கணிப்பின்படி தவெக 18 முதல் 24 தொகுதிகளைக் கைப்பற்றக்கூடும் என்றும், சாணக்யா ஸ்ட்ராட்டஜி கணிப்பின்படி 13 முதல் 18 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 23.6 சதவீத வாக்கு வங்கியை விஜய் தலைமையிலான தவெக ஈர்க்கும் என்பது திராவிடக் கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
குறிப்பாக நகர்ப்புறங்களில் விஜய்யின் வருகை இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் வாக்குகளைப் பிரித்துள்ளதாகத் தெரிகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சியும் சில தொகுதிகளில் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் பாரம்பரியக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது.
இளைஞர்கள் - முதல்முறை வாக்காளர்கள்
இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது இந்தத் தேர்தலில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. இந்த வாக்குகள் தவெக மற்றும் நாதக கட்சிகளுக்குச் சென்றதே திமுக, அதிமுகவின் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளியாகியுள்ள முக்கியக் கருத்துக்கணிப்புகளும் திமுகவின் வெற்றியையே முன்னிறுத்தினாலும், தவெக பிடிக்கும் வாக்குகள் எதிர்காலத் தமிழக அரசியலில் புதிய டர்னிங் பாயிண்ட்டை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.. இவைகள் எல்லாம் ஒரு கணிப்புதான் என்றாலும், மே 4ம் தேதி அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளிவரும் போதுதான், இந்த எக்ஸிட் போல் நிஜமாகுமா அல்லது மாற்றங்கள் நிகழுமா என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications