21-ம் தேதி இரவு ஸ்கெட்ச்.. தமிழகத்தில் 15 தொகுதிகளில் தேர்தல் ரத்தாக வாய்ப்பு? டெல்லிக்கு ரிப்போர்ட்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை மற்றும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வி.வி.ஐ.பி தொகுதிகளில் பணப்பட்டுவாடா மற்றும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், பல தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவங்கள் குறித்த சில எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவங்கள் குறித்த சில எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தேர்தலுக்கான வாக்குபதிவுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கின்றன. தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இரு தரப்பும், வாக்காளர்களை ஏற்கனவே காஸ்ட்லியாக கவனித்து வந்துள்ளன.

ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய்
ஒரு வாக்குக்கு 1000 முதல் 2000 ரூபாய் வரை தொகுதிகளில் புழங்கு கிறது. மாஸ் தொகுதி என சொல்லப்படும் தொகுதிகளில் இந்த 2000 என்பது 5,000 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக விவிஐபி போட்டியிடும் சில தொகுதிகளில் 10,000 வரையிலும் பணம் விளையாட்டு தாண்டவமாடுகிறதாம்.. அதாவது, ஆளும்கட்சியின் வி.வி.ஐ.பி.க்கள் மற்றும் எதிர்க்கட்சியான அதிமுகவின் வி.வி.ஐ.பி.க்கள் களமிறங்கும் தொகுதிகளில் இந்த வாக்குகள் பர்ச்சேஸ் என்பது அசூர பலம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
முதல் கட்ட பணப்பட்டுவாடா ஏற்கனவே முடிந்துள்ள நிலையில், பலகீனமான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள தொகுதிகளில் இரண்டாம் கட்ட பண விநியோகத்திற்கான ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
21-ந் தேதி இரவு இதனை பட்டுவாடா
முக்கியமாக, வரும் 21-ந்தேதி இரவு இதனை பட்டுவாடா செய்ய பிரதானக் கட்சிகள் தீர்மானித்திருக்கின்றனவாம். இந்த பண விநியோகத்தை செய்ய கட்சிக்கு சம்மந்தமில்லாத டீம்களை இரு தரப்பும் உருவாக்கி வைத்துள்ளது. அந்த டீம் தான் கடைசி கட்டத்தில் களமிறக்கப்பட வுள்ளனர். இதையெல்லாம் கண் கொத்திப் பாம்பாக தேர்தல் பறக்கும் படையினரும், தொகுதி அப்சர்வர்களும் கவனித்து வருகின்றனர்.
ஏற்கனவே, பண விளையாட்டு அதிகமுள்ள தொகுதிகள் என அடையாளம் காணப்பட்டு அந்த தொகுதியில் நடக்கும் பல விஷயங்களை பதிவு செய்து வைத்துள்ளார்களாம்.. வாக்குப் பதிவுக்கு முந்தைய இரண்டு நாட்களில் நடக்கவிருக்கும் பண விளையாட்டையும் நோட்டம் விட்டு பதிவு செய்தப் பிறகு, அதனை டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க பறக்கும் படையிலுள்ள உயரதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே, வருமான வரித்துறையினரும் சீக்ரெட்டாக பண விளையாடும் தொகுதிகளை கண்காணித்து பதிவு செய்து வருகிறார்கள். அதனை பறக்கும் படையினருக்கும் தெரிவித்து வருகிறார்கள்.
15 விவிஐபி தமிழக தொகுதிகள்
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 15-க்கும் மேற்பட்ட முக்கியமான பல தொகுதிகள் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் ரேடார்களில் இருப்பதால், கடைசி கட்ட பண விநியோகத்தை பிடித்து அந்த தொகுதிகளில் தேர்தலை நிறுத்தி வைக்கும் யோசனையும் டெல்லிக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனநாயகத்தின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கும் இந்தப் பண விநியோகத்தைத் தடுக்க தேர்தல் ஆணையம் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள், அரசியல் வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன. தேர்தல் நியாயமாக நடக்குமா அல்லது பண பலம் மீண்டும் ஒருமுறை ஜனநாயகத்தை வெல்லுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். ஆணையத்தின் இந்த கிடுக்கிப்பிடி விசாரணை தமிழகத் தேர்தல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையக்கூடும் என்றே தெரிகிறது...!!!
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications