கோபத்தில் இஸ்லாமியர்கள்.. ராஜ்யசபா சீட் கொடுத்து கூல் பண்ண அதிமுக யோசனை.. யாருக்கு கிடைக்கும்?
சென்னை: எப்படியும் இந்த முறை ராஜ்ய சபா சீட்டினை முஸ்லிம் ஒருவருக்கு அதிமுக தரப்பட நிறையவே வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இப்போதைய சூழலில் அதிமுகவினால் 3 ராஜ்யசபா உறுப்பினர்களைதான் தேர்ந்தெடுக்க முடியும். இதில், ஒன்று அன்புமணி ராமதாசுக்கு என்றும் மற்றொன்று கூட்டணி கட்சியான பாஜகவுக்கும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. மீதமுள்ளது ஒரே ஒரு ராஜ்ய சபா சீட் தான். இதை யாருக்கு தருவது என்பதில்தான் இப்போது குழப்பம் கூறுகிறார்கள்.
இந்த ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு கேபி முனுசாமி முதல் கோகுலஇந்திரா வரை வரிசை கட்டி நின்றாலும், இஸ்லாமியர் ஒருவருக்கு வாய்ப்பு தரப்படலாம் என்று பேசப்பட்டு வருகிறது.
புடிங்க.. புடிங்க.. விரட்டி சென்ற வினோத்.. ஆனால் இப்படி நேரும் என யாரும் நினைக்கவில்லை!
கமல், சீமான்
இதற்கு 2 காரணங்கள் உள்ளன.. ஒன்று, அதிமுக-பாஜக கூட்டணி சமயத்தில் இஸ்லாமியர் ஒருத்தருக்குகூட அதிமுக சீட் தரப்படவில்லை என்ற பேச்சு எழுந்தது. இதை கமல், சீமான் உள்ளிட்டவர்கள் பகிரங்கமாகவே விமர்சித்து இருந்தனர்.
சிறுபான்மையினர்
மற்றொரு காரணம், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான், அதிமுக தோல்வியை தழுவியது என்பதை அமைச்சர் சிவி சண்முகம் முதல் கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாகவே கருத்து கூறினர். அதுவும் இல்லாமல், சிறுபான்மையினரின் அதிருப்தியை அதிமுக நிறைய சம்பாதித்து வருவதாகவும் கருதப்பட்டது.
கோஷ்டி பூசல்
இதற்கிடையில், அன்வர்ராஜா எடப்பாடி தரப்புக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ராமநாதபுரத்தில் அன்வர் ராஜாவுக்கும், அமைச்சர் மணிகண்டனுக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தமாகவே இருந்ததால், கோஷ்டி பூசலை சமாளிக்க கூட்டணி கட்சியான பாஜகவுக்கு சீட் வழங்கப்பட்டு இருந்தது.
விண்ணப்ப கடிதம்
அந்த சமயத்தில், அன்வர்ராஜா எழுதிய அந்த கடிதத்தில், "இஸ்லாமியர்கள் மிக அதிகமாக வாழ்கின்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் ராஜ்யசபா உறுப்பினர் ஆகும் வாய்ப்பு நம்முடைய கட்சியில் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. அதனால் வரும் ஜூன் மாத இறுதியில் ராஜ்யசபா உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை எனக்கு வழங்கிட வேண்டும்" என்று விண்ணப்ப கடிதம் கொடுத்திருந்தார். இதையெல்லாம் மனதில் வைத்தே இஸ்லாமியர் ஒருவருக்கு வாய்ப்பு தரலாம் என அதிமுக யோசித்து வருகிறதாம்.
யாருக்கு வாய்ப்பு?
அப்படி தருவதாக இருந்தால், ஒன்று அன்வர் ராஜாவாக இருக்கும், அல்லது அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன் இவர்களில் ஒருவருக்கு அந்த வாய்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது. அன்வர்ராஜா மீது ஒருசில அதிருப்தி சம்பவங்கள் தொகுதியில் நடந்துள்ளது, மேலும் உள்கட்சி பூசலும் தீர்ந்தபாடில்லை என்பதால் இவருக்கு சீட்டு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
தமிழ்மகன் உசேன்
அதேசமயம், தமிழ்மகன் உசேனை பொறுத்தவரை, எடப்பாடி, ஓபிஎஸ் இரு தரப்பிடமும் நெருங்கி பழகி சுமூக நட்பை பெற்றிருப்பவர் என்பதால், ராஜ்ய சபா சீட் இவருக்கு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம். ஒருவேளை இஸ்லாமியர் ஒருவரை வேட்பாளராக அதிமுக முன்னிறுத்தினால், பாஜக என்ன செய்ய போகிறதோ, எப்படி ஏற்றுக் கொள்ள போகிறதோ என்ற எதிர்பார்ப்பு எல்லாவற்றையும்விட நமக்கு அதிகமாக எகிறி உள்ளது.