மோதிக்கொள்ளும் பாஜக vs திமுக.. கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த வழக்கறிஞர்கள் கூட்டாக பேட்டி
சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஏற்கனவே ஜாமீனில் எடுத்த வழக்கறிஞர்கள் கூட்டாக பேட்டி அளித்தார். "கட்சிக்கும் எங்கள் தொழிலுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஏற்கனவே ஜாமீனில் எடுத்த வழக்கறிஞர் முத்தமிழ் செல்வக்குமார் பாஜகவைச் சேர்ந்தவர் என்று திமுக குற்றம்சாட்டி வருகிறது. இதேபோல் கருங்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த இளைஞர்கள் திமுகவினர் என்று பாஜகவும் குற்றம்சாட்டி வருகிறது. திமுக பாஜக ஐடி விங்குகள் மாறி மாறி இந்த விவகாரத்தில் மோதி வருகின்றன.

முன்னதாக அமைச்சர் ரகுபதி வெளியிட்ட பதிவில், "ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டு உள்ள கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. இவரை சிறையில் இருந்து ஜாமினில் எடுத்த வழக்கறிஞர் பா.ஜனதாவில் இருப்பதாக ஒரு தகவல் வெளியானது.
ஏற்கனவே பா.ஜனதா அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை பா.ஜனதா வக்கீல் ஜாமினில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது. இந்த கோணத்திலும் போலீசார் தீவிரமாக தனது விசாரணையை விரிவுப்படுத்தி இருக்கிறது" என்று கூறியிருந்தார்.
இதனிடையே திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், "ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை முந்தைய வழக்கில் ஜாமினில் எடுத்த திருவாரூர் மாவட்ட பா.ஜனதா வக்கீல் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வக்குமார். அம்பலமான பா.ஜனதாவின் தனக்குத்தானே வெடிகுண்டுத் திட்டம்" என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுத்து பாஜக ஐடி விங்க் சார்பில் வெளியிட்ட பதிவில், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்த திமுகவினர். ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்ற நபரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது, திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர் என்பது தெரிய வருகிறது. பாஜக வழக்கறிஞர் என்று பரப்பப்படும் முத்தமிழ் செல்வன் என்பவர் தமிழக பாஜக கட்சி பொறுப்பிலிருந்து 2021ஆம் ஆண்டே விலகிவிட்டார்.
அது மட்டும் அல்லாது திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவரும் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரை பயன்படுத்தி ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளனர் என்று செய்திகளும் வருகிறது. தமிழக பாஜக அலுவலகத்தை தாக்கிய ஒருவரை திமுகவினர் ஜாமினில் எடுத்துள்ளது இதில் திமுகவினர் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது." என்று பாஜக ஐடி விங் கூறியுள்ளது.
பாஜக திமுக மாறி மாறி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருக்கா வினோத் விவகாரத்தில் கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் கருக்கா வினோத்தை ஏற்கனவே ஜாமீனில் எடுத்த முத்தமிழ் செல்வக்குமார் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பிரபல தமிழ் செய்தி ஊடகம் ஒன்றுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது முத்தமிழ் செல்வக்குமார் கூறுகையில், "நான் பாஜகவில் இருக்கும் வழக்கறிஞர் என்று இல்லை.. வழக்கறிஞர் தொழில் செய்து கொண்டிருக்கக்கூடிய சாதாரண வழக்கறிஞர் அவ்வளவுதான்.. பாஜக உள்பட எந்த கட்சிக்குமே இதில் சம்பந்தம் இல்லை.. ஒரு வழக்கறிஞர் நான்.. என்னிடம் ஒரு வழக்கு வருகிறது.. அது எந்த வகை குற்றமாக இருந்தாலும் வழக்கறிஞராக வழக்கு தாக்கல் செய்கிறோம். நான் அல்ல.. எந்த வழக்கறிஞரும் தன்னிடம் வழக்கை அணுகுவார். அதன் அடிப்படையில் தான் ஜாமீனில் எடுத்தோம். நான் எந்த அரசியல் கட்சியிலும் கிடையாது.. சட்டக்கல்லூரியில் படித்த காலத்தில் பாஜகவில் இருந்தேன். இப்போது இல்லை.. வழக்கறிஞராக மாறிய பின்னர் நான் எந்த கட்சியிலும் உறுப்பினராக இல்லை..
எதில் சர்ச்சை என்ன இருக்கிறது.. ஒரு பெயில் போடுகிறோம்.. நீதிமன்ற உத்தரவின் பெயரில் அவர் பெயிலில் வருகிறார்.. அந்த நேரத்தில் அவர் என்ன மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்றெல்லாம் நம்மால் கணிக்க முடியாது.. வழக்கு என்னவோ, அதனை நாம் போட போகிறோம்.. நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவோம்.. இதுதான் நீதிமன்றத்தில் நடைமுறை.. எனவே இந்த விஷயத்தில் கருக்கா வினோத்தின் பழைய வரலாறுகளை எல்லாம் பார்க்க முடியாது அல்லவா? " இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications