முதல்வர் ஸ்டாலின் கான்வாய் போன நேரம்.. ஆட்டோவில் துடித்து பலியான சிறுவன்! நெஞ்சை கலங்க வைத்த சம்பவம்
சென்னை: சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் நான்கரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் கான்வாய் வாகனத்தை தொடர்ந்து ஆட்டோ வந்ததால் காவலர் அதனை மறித்துள்ளார். அப்போது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சேகர் (58). இவர் தனது நான்கரை வயது மகன் அலோக்நாத் தர்ஷன் மற்றும் மனைவி ஷாலினியுடன் நேற்று மாலை தனது ஆட்டோவில் சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடற்கரையை சுற்றிப்பார்க்க அவர்கள் காமராஜர் சாலையில் சென்றுள்ளனர்.

அப்போது, தமிழக முதல்வரின் வாகனம், பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே கருணாநிதி நினைவிடம் நோக்கிச் சென்றதால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முதல்வரின் கான்வாய் வாகனம் வரும் சமயத்தில் அந்த சாலையில் சேகரின் ஆட்டோ சென்றுள்ளது.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மகேந்திரன், திடீரென ஆட்டோவை வழிமறித்து தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் சேகர் சடன் பிரேக் பிடிக்க முயன்றதில், ஆட்டோ காவலர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுநர் சேகர், நான்கரை வயது சிறுவன் அலோக்நாத் தர்ஷன் மற்றும் காவலர் மகேந்திரன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
முதல்வர் உடனே வண்டியை நிறுத்தி, விபத்து குறித்து விசாரித்து, உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.
தகவலறிந்த உடனேயே ஐ.ஜி உள்பட அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளும் நிகழ்விடத்திற்கு வந்து, ஆம்புலன்ஸ் மூலம் கீரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் அலோக்நாத் தர்ஷன் உயிரிழந்தார்.
பின்னர் சிறுவன் அலோக்நாத் தர்ஷனின் உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூராய்வுக்கு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தையின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழும் காட்சி பார்ப்போர் நெஞ்சை கலங்கச் செய்தது.
விபத்து நிகழ, காவலர் திடீரென ஆட்டோவை மறித்ததே காரணம் என்றும், விபத்துக்கு காரணமாக இருந்த காவலர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுத்து காவலர் மகேந்திரனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என சிறுவனின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications