தமிழக தேர்தல் திருவிழா.. நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது.. மக்கள் மனங்களை வெல்லப் போவது யார்?
சென்னை: தமிழகத்தில் நாளை மாலை 7 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் வருகிற 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல்
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ள ஆளும் கட்சியான அ.தி.மு.க , பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்து தேர்தலை சந்திக்கிறது.''இப்போ இல்லைனா எப்பவும் இல்ல'' என்ற தீவிர முடிவில் ஆட்சியை கைப்பற்றும் வகையில் களமிறங்கியுள்ள தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இதர கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

தீவிர வாக்கு சேகரிப்பு
இது தவிர அ.ம.மு.க-தே.மு.தி.க கூட்டணியும், மக்கள் நீதி மய்யம்-சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியும் தேர்தலை சந்திக்கின்றன. நாம் தமிழர் கட்சி தனியாக களம் காண்கிறது. கோடை வெயில் சுட்டெரித்தாலும், கொரோனா தொற்று அச்சுறுத்தினாலும் அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் பம்பரமாக சுழன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

யுக்திகளை கையாளும் தலைவர்கள்
ஆளும் கட்சி தலைவர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி குற்றம்சாட்டி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் கட்சியினர் அரசின் திட்டங்களை முன்வைத்தும், எதிர்க்கட்சியினர் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியும் வாக்கு வேட்டையில் ஈடுபடுகின்றனர். மக்களின் வாக்குகளை கவர தோசை சுடுவது, துணிகளை துவைப்பது, சிலம்பம் ஆடுவது, பாட்டு பாடுவது என பல்வேறு யுக்திகளை அரசியல்வாதிகள் கையாண்டனர்.

நாளையுடன் முடியும் பிரசாரம்
இந்த பிரசாரங்களில் சர்ச்சை பேச்சுக்களும் இல்லாமல், இல்லை. தி.மு.க.வின் திண்டுக்கல் லியோனி, ஆ.ராசா, பா.ஜ.க.வின் ராதாரவி ஆகியோர் பேசியது சர்ச்சையானது. ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட 2 நாள் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை மாலை 7 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சியினர் மக்கள் மனங்களை வென்று விட வேண்டும் என்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் 6-ம் தேதி காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது. மக்கள் மனங்களை வெல்லப்போவது யார்? என்பது மே 2-ம் தேதி தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications