தமிழ்நாட்டுக்கு 33.19 டி.எம்.சி தண்ணீர் திறக்கணும்.. கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டுக்கு 33.19 டி.எம்.சி தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
மேகதாது அணை திட்ட பிரச்சினை தமிழ்நாடு, கர்நாடகா இடையே மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது. மேகதாது திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா சமீபத்தில் கூறிய கருத்தே பிரச்சினைக்கு அச்சாரமாக அமைந்து விட்டது.
மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது எடியூரப்பா கூறிய இந்த சர்ச்சை கருத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பின. இது நல்லுறவுக்கு உகந்தது அல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலினும் எடியூரப்பாவுக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா பங்கேற்றார். கர்நாடகா, கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அப்போது எடியூரப்பா கருத்துக்கு தமிழ்நாடு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஒப்பந்தப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் முறைப்படி தரவில்லை என்று தமிழ்நாடு குற்றம் சாட்டியது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு 33.19 டி.எம்.சி தண்ணீரை வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஜூன், ஜூலை மாதங்களுக்கான 33.19 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக தமிழ்நாட்டுக்கு திறக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையம் கூறியது.