ஜஸ்ட் மிஸ்.. விபத்திலிருந்து தப்பிய சென்னை விமானம்! விமானி சாதுரியத்தால் உயிர் தப்பிய 165 பயணிகள்
சென்னை: சென்னையிலிருந்து டெல்லி செல்ல இருந்த பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதை உணர்ந்த விமானி, விமானத்தை இயக்காமல் தவிர்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
விஸ்தாரா நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் 61 விமானங்களை இயக்கி வருகிறது. பொதுவாக விமான நிறுவனங்கள் போயிங் அல்லது எர்பஸ் எனும் இரண்டு விமான தயாரிப்பு நிறுவனங்களில் ஏதேனும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் விமானத்தைதான் வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் விஸ்தாரா நிறுவனம் 46 ஏர்பஸ் ஏ320நியோ, 10 ஏர்பஸ் ஏ321, ஒரு போயிங் 737-800என்ஜி மற்றும் நான்கு போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானங்களை இயக்கி வருகிறது.

சர்வதேச விமான நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்கு இந்த நிறுவனம் சிறப்பான விமான சேவையை வழங்கி வருகிறது. பிரிட்டனை சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ், விமான நிறுவனங்களின் செயல்பாட்டை ரிவ்யூ செய்து ஒவ்வொரு ஆண்டும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் நடப்பாண்டின் சிறந்த சர்வதேச விமான சேவை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் விஸ்தாரா நிறுவனம் 19வது இடத்தை பிடித்திருக்கிறது. அதேபோல ஆசிய அளவில் 8வது இடத்தையும் பிடித்திருக்கிறது.
இந்நிலையில் இன்று காலை 6.55 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லிக்கு விஸ்தாரா நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட இருந்தது. திட்டமிட்டபடி பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக இருந்தது. ஆனால் விமானத்தை ரன்வேக்கு கொண்டு வந்த விமானிகள், இதில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து இந்த விமானத்தின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் விமானத்தில் இருந்த 165 பயணிகளும் இறக்கிவிடப்பட்டு, விமானத்தின் இயந்திர கோளாறு சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் பிரச்னை சரி செய்யப்பட்டன பின்னர் விமானம் பயணிகளுடன் சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டது. சரியான நேரத்திற்கு தொழில்நுட்ப கோளாறு குறித்து விமானிகள் கண்டுபிடித்து கூறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் லேசான சலசலப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications