திருவாரூர் இடைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி.. உயர்நீதிமன்றத்திலும் வழக்கு!
Recommended Video

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையை நாளைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம், அறிவித்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி மறைவால் திருவாரூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக, திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் உயிரிழந்ததை அடுத்து அந்த தொகுதியும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதால், மேற்கண்ட இரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் 18 எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்பட்டதால் காலியாக உள்ள அந்த 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழையை காரணம் காட்டி தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இடைத்தேர்தலை ஒத்திவைக்க தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார்.

திருவாரூரில் இடைத்தேர்தல்
அதையடுத்து, மற்ற 2 தொகுதிகளுக்கு தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை என தேர்தல் ஆணையமும் அறிவித்தது. 18 தொகுதிகளுக்கான தேர்தல் குறித்து எந்த முடிவையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படுமா அல்லது லோக்சபா தேர்தலுடன் ஒன்றாக நடத்தப்படுமா என்ற தெரியாத நிலையில் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

வரும் 28ம் தேதி தேர்தல்
அதன்படி, வரும் 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். வேட்பு மனுத்தாக்கல் நாளைதொடங்குகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

விவசாயிகள் சங்கம் முறையீடு
காவேரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் சத்திய நாராயணன் என்ற விவசாயி சார்பாக மூத்த வழக்கறிஞர் என்ஜிஆர் பிரசாத் ஆஜராகி, தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையீடு செய்தார். அப்போது, அவர் திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி, வேறொரு நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் முறையிட்டோம். அதற்கு முதலில் மனு தாக்கல் செய்யுங்கள்.

அவசர வழக்கு
பின்னர், விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்து விட்டனர். ஆனால், நாளை தேர்தல் குறித்த அறிவிப்பை ஆணையம் வெளியிடக் கூடும். அவ்வாறு அறிவிப்பு வெளியிட்டு விட்டால், வழக்கு தொடர முடியாது. எனவே, இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். அதுதொடர்பாக மனு தயாரித்து உள்ளோம் என்று தெரிவித்தார்.

கேள்வி எழுப்பிய நீதிபதி
அதற்கு தலைமை நீதிபதி வி.கே. தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் கொண்ட பெஞ்சானது, மனு தாக்கல் செய்யப்பட்டு நம்பர் ஆகி விட்டதா என கேள்வி எழுப்பினர். இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் தொடர்பான வழக்குகள் எந்த அமர்வு விசாரிக்கும் என ஆராய்ந்து மதியம் தெரிவிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

நாளை விசாரிக்கப்படும்
அதன்படி, திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு நாளை விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது. இந்த வழக்கை நாளை நீதிபதி சங்கரநாரயணன் அமர்வு விசாரிக்க உள்ளது. முன்னதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா தேர்தலை தள்ளி வைக்கக் கோரி வழக்குத் தொடர்ந்திருப்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications