விஜய்..விக்கிரவாண்டி..வி-சாலை.. தவெக ‘தலைவரின்’ வி சென்டிமென்ட் .! விஜயகாந்த் வேற இருக்காரே.. செம்ம..!
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தனது பெயர் போலவே வி சென்டிமென்ட் இருக்க வேண்டும் என்பதற்காகவே விஜய் இந்த பகுதியை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்கின்றனர் அக்கட்சியினர். அது மட்டும் அல்லாது தனது அரசியல் பயணத்தை வி ( விக்டரி) உடன் தொடங்க வேண்டும் என்பதோடு, விஜயகாந்த் சென்டிமென்ட் ஒன்றும் காரணம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
வரும் செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கை உள்ளிட்டவை குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை அடுத்து மாநாட்டை நடத்துவதற்காக தீவிர ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வருகின்றனர். மாநாட்டுக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என உச்சகட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு தொகுதிக்கும் 2 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் ஆட்களை திரட்டி வர ஏற்பாடுகள் நடக்கிறது. முன்னதாக மாநாட்டுக்கு அனுமதி கேட்டு தவெக சார்பில் விழுப்புரம் காவல்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையே விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் 21 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதியிருந்தார்.
அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? அவசர காலங்களில் மருத்துவ வசதி மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதா? என கேட்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கறிஞர்கள் மற்றும் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் பதில் அளித்தார். இதனையடுத்து விஜய்யின் தவெக முதல் அரசியல் மாநாட்டிற்கு காவல்துறை 33 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. மாநாட்டின் மேடை, மாநாட்டு இடம், பார்க்கிங் வசதி ஆகியவைகளின் வரைபடங்களை கொடுக்க வேண்டும், அனைவருக்கும் குடிநீர், உணவு ஏற்பாடு செய்ய வேண்டும், விஜய் வந்து செல்லக்கூடிய அந்த வழியில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக்கழகத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை நடத்துவதாக கூறப்பட்டது வெறும் ஊடக பரபரப்புக்காக தான் என்கின்றனர் விவரம் அறிந்த அரசியல் கட்சியினர். ஆரம்பத்தில் இருந்தே விஜய் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் மாநாடு நடத்தவே விருப்பப்பட்டார் என்கின்றனர்.
இதற்கு காரணம் ஜோதிடர்களின் அறிவுரைப் படி விஜய்யின் ’வி’ சென்டிமென்ட் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். வி என்றால் பொதுவாக வெற்றி என்பதை குறிக்கும். இதனால்தான் அவரது கட்சியின் பெயரில் வெற்றி என்ற வார்த்தை வரும் வகையில் தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. விஜய் என்றாலும் வெற்றி தான். பல நடிகர்கள் கூட தங்கள் பெயருக்கு முன்னேயும் பின்னேயும் விஜய் என்கிற வார்த்தையை சேர்த்து இருக்கின்றனர். அருண் விஜய், விஜய் வசந்த், விஜய டி ராஜேந்தர் என பலரை குறிப்பிடலாம்.
இதனால் வி என்ற வார்த்தை மீது எப்போதுமே விஜய்க்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. இதனால் தான் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் வி சாலை கிராமத்தில் ’வெற்றி’ கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டிருக்கிறார். இது மட்டுமல்லாமல் சினிமாவில் தனக்கு தனி ஒரு அடையாளத்தை பெற்றுக் கொடுத்த விஜயகாந்த் முதன்முறையாக விருதாச்சலம் தொகுதியில் நின்று தான் வெற்றி பெற்றார். இது ஒரு சென்டிமென்ட் என்பதாலேயே வி என வருமாறு பார்த்து பார்த்து விஜய் மாநாடு நடத்த திட்டமிட்டார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதனால் அடுத்த தேர்தலில் விக்கிரவாண்டி, விழுப்புரம், விருத்தாசலம் தொகுதிகளில் விஜய் போட்டியிடலாம் என்றும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications