ஷாக்..பாதிவழியில் கழன்ற ரயில் பெட்டிகள்! பதைபதைத்து போன பயணிகள்! சேரன் எக்ஸ்பிரசில் திக்திக் நொடிகள்
சென்னை : சென்னையில் இருந்து கோவை சென்ற சேரன் விரைவு ரயிலின் இரு பெட்டிகளின் இணைப்பு திருவள்ளூர் அருகே துண்டாகியதில் நல்வாய்ப்பாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் ரயிலை நடைமேடையில் நிறுத்தியதால் பெருத்த உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சேரன் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கோவை மக்களின் விருப்பத்திற்குரிய இந்த ரயில் சேவை தினசரி ரயில் சேவையாக ரயில்வே துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் மூலம் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். சென்னையில் இருந்து மட்டுமல்லாமல் வழி நெடுகிலும் உள்ள பல்வேறு மாவட்ட மக்களும் கோவை செல்ல இந்த ரயில் சேவையையே பயன்படுத்தி வருகின்றனர்.

சேரன் விரைவு ரயில்
இந்நிலையில் சென்னையில் இருந்து கோவை சென்ற சேரன் விரைவு ரயிலின் இரு பெட்டிகளின் இணைப்பு திருவள்ளூர் அருகே துண்டாகியதில் நல்வாய்ப்பாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து 12673 என்ற எண் கொண்ட சேரன் விரைவு ரயில் புறப்பட்டு திருவள்ளூர் அருகே இரவு 11 மணிக்கு சென்ற போது S7 மற்றும் S8 ஆகிய 2 பெட்டிகளிடையே பயங்கர சத்தம் ஏற்பட்டுள்ளது.

அலறிய பயணிகள்
இதனால் ரயிலில் பயணித்த ரயில் பயணிகள் பயத்தில் அலறியுள்ளனர். திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் ரயில் சென்ற போது திடீரென்று இரண்டு பெட்டிகளை இணைக்கும் இணைப்பு கொக்கி உடைந்து பலத்த சத்தம் கேட்டுள்ளது ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியுள்ளார்.எனினும் பலத்த சத்தம் கேட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

உயிர் சேதம் தவிர்ப்பு
வழக்கமாக அதிவேகமாக செல்லும் விரைவு ரயில், நிலையத்தின் அருகே குறைந்த வேகத்தில் சென்றதாலும், ஓட்டுநரின் சாமர்த்தியத்தாலும் பெருத்த உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டிகளின் இணைப்பு உடைந்த இடத்தில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

விசாரணைக்கு உத்தரவு
இதனால் ரயில் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் இருப்புப்பாதை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.பின்னர், சென்னை பெரம்பூர் கேரேஜில் இருந்து இணைப்பு கொக்கிகள் புதியதாக வரவழைக்கப்பட்டு அவை விரைவு ரயிலுடன் இணைக்கப்பட்டு 3 மணி நேரத்திற்கு பின் அரக்கோணம் மார்க்கமாக கோவைக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications