தடுப்பூசி போடுவதற்கு முன்பும், பின்பும் இரத்த தானம் செய்யலாமா? இதோடாக்டரின் பதில்கள்.. இதை படியுங்க
சென்னை: தமிழகத்தில் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு 22,000-ஐ கடந்து விட்டது. உயிரிழப்பும் 100-ஐ கடந்து சென்று விட்டது.
தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா குறித்தும், தடுப்பூசி தொடர்பாகவும் மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இது தொடர்பாக சந்தேகங்களை டாக்டர் திலீபனிடம் கேட்டு தெளிவு பெறுவோம் வாங்க.
18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பலர் தடுப்பூசி போட்ட 3 அல்லது 4 மாதங்களில் இரத்த தானம் செய்யக்கூடாது என கூறுகிறார்கள்? இதனால் இரத்ததுக்கு தட்டுப்பாடுகள் ஏற்படுமா?இரத்தம் தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு இளைஞர்கள் அனைவருக்கும் ஒரே நாளில் தடுப்பூசி போடப்போவது கிடையாது. இதனால் இரத்த தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை.

தடுப்பூசி பெறுவதற்கு முன்பாக இரத்ததானம் செய்யலாமா? தடுப்பூசிகள் மிக வீரியம் உள்ளது என்பதால் இரத்த தானம் செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
கண்டிப்பாக ரத்த தானம் செய்யலாம். அப்படி ஏதும் பயம் இருந்தால், இரத்த தானம் செய்த ஒரு வாரம் கழித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மிகவும் நல்ல உடல்நலன் கொண்டவர்களே இரத்த தானம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக அவர்களின் ஹீமோகுளோபின் அளவு, வயதின் தன்மை ஆகியவை பார்க்கப்படுகிறது. இரத்த தானம் செய்தால் சில நாட்கள் களைப்பு ஏற்பட்டதுபோல் உணரலாம். மற்றபடி வேறு எந்த பிரச்சினையும் இருக்காது. எனவே இரத்த தானம் செய்பவர்கள் தடுப்பூசி போட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
தடுப்பூசி போடுவதற்கு முன்பு நமது உடல்நிலை எந்த அளவுக்கு உள்ளது என்ற பரிசோதனை செய்ய வேண்டுமா?
இந்த சந்தேகம் பொதுவாக நிறைய பேரிடம் இருக்கிறது. இப்படி பரிசோதனை செய்யுங்கள் என்று எந்த டாக்டரும் சொல்வதில்லை. அது தேவையுமில்லை. கொரோனா தொற்று மிக அதிகமாக இருப்பவர்கள் உடனடியாக தடுப்பூசி போட வேண்டாம். இதேபோல் புற்றுநோய் உள்ளிட்ட பெரிய நோய்கள் இருப்பவர்களும் பரிசோதனைக்கு பின்பு தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சிலருக்கு முதல் டோஸில் பக்க விளைவுகள் ஏதும் இல்லாமல், இரண்டாவது டோஸில் மட்டும் பக்க விளைவுகள் ஏற்படுவது ஏன்?
இப்படியெல்லாம் கிடையாது. சிலருக்கு முதல் டோஸில் பக்க விளைவுகள் வந்துள்ளன. இரண்டாவது டோஸில் இல்லை. நீங்கள் கூறியபடி வேறு சிலருக்கு முதல் டோஸில் பக்க விளைவுகள் இல்லை. இரண்டாவது டோஸில் இருக்கிறது. சிலருக்கு இரண்டு டோஸிலும் பக்க விளைவுகள் ஏற்பட்டு இருக்கின்றன. பக்க விளைவுகள் என்பது நமது உடல்நிலையை பொறுத்துதான் ஏற்படும். எனவே பக்கவிளைவுகள் இவர்களுக்கு இப்படிதான் இருக்கும்? என்று நாம் கணிக்க முடியாது. நம்மை பாதிக்கும் அளவுக்கு பெரிய பக்க விளைவுகள் இருக்கும் என்று மக்கள் நினைக்க வேண்டாம். பக்க விளைவுகளை ஏற்படுத்துவதை விட தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக செய்லபடுவதால் மக்கள் இதனை பயப்படாமல் போட்டுக் கொள்ள வேண்டும்.
கொரோனா காலத்தில் நீங்கள் மக்களுக்கு சொல்லக்கூடிய அறிவுரைகள் என்ன?
கொரோனா வரும்முன் காப்பதே சிறந்தது. எல்லோரும் மாஸ்க் போட வேண்டும். அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிருங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications