கிறிஸ்துமஸ் விழாவை இந்து அறநிலையத்துறை அமைச்சர் நடத்துவது தான் திராவிட மாடல்.. முதல்வர் ஸ்டாலின்
சென்னை: எந்த மதமும் வேறுபாட்டை போதிப்பதில்லை என்றும், கிறிஸ்துமஸ் விழாவை இந்து அறநிலையத்துறை அமைச்சர் நடத்துவது தான் திராவிட மாடல் அரசு என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.
சென்னை பெரம்பூரில் கிறிஸ்தவ விழா நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. நடக்கிறது கிறிஸ்துமஸ் விழா.. நடத்துபவர் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. இது தான் திராவிட மாடல்.

இது சமத்துவ பெருவிழாவாக நடந்து வருகிறது. இந்திய நாடு என்பது பல்வேறு மதங்களை பின்பற்றுகிற மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய நாடு. வேற வேற மத நம்பிக்கைகள் இருந்தாலும் அது அவங்கவங்களுக்கு சொந்தமானதாக இருக்குமே தவிர மற்றவங்களுக்கு எதிரானதாக இருக்காது. ஏனென்றால் எல்லா மதங்களும் அன்பை மட்டும் தான் வலியுறுத்தி சொல்கிறது. எந்த மதமும் வேறுபாட்டை போதிப்பதில்லை. இதனால் தான் கழக சிறுபான்மை சார்பில் நடக்கிற விழாவுக்கு மத நம்பிக்கையாளர்களும் வந்திருக்கிறார்கள்.
நாம் எல்லாரும் ஒற்றுமையாக சகோதரர்களாக இருக்கிறோம். இன்று இந்த விழாவில் கூடியிருக்கிறோம். ஆனால் இந்த ஒற்றுமை உருவாவதை சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்துவர்களால், மத ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் தான் இந்த ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த பாடுபடுகிற திமுகவையும் அந்த வகுப்பு வாத கட்சிகளுக்கு பிடிக்கவில்லை.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் எல்லா பிரிவினரும் அமைதியாக ஒற்றுமையாக இருக்கிறார்கள். இதை தடுக்க ஒரு கூட்டம் தவியா தவிக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் எத்தனை வருடம் ஆனாலும் இந்த கூட்டத்தால் இந்த மண்ணில் வெற்றி பெற முடியாது. ஒரு மனிதன் தன் மேலையும் அன்பு செலுத்தனும்.. பிற உயிர்கள் மீதும் அன்பு செலுத்தனும் என்று தான் எல்லா மதமும் கூறுகிறது. யாரையும் வேற்றுமையாக பார்க்காதே என்பது சகோதரத்துவம்.
அனைவருடனும் சேர்ந்து வாழ் என்பது தான் ஒற்றுமை. ஏழைகள் மீது கருணை காட்டுவது தான் இரக்கம். அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது தான் நீதி. மற்றவர்களுக்காக வாதாடுவது தான் தியாகம். உன்னிடம் இருப்பதை இல்லாதவர்களிடம் கொடுப்பது தான் பகிர்தல். இதையெல்லாம் நம்முடைய கிறிஸ்துவம் சொல்கிறது. உன்னதமான குணங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தால் அதுதான் சமத்துவ நாடாக அமையும்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினேன். 2 வாரத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது. இப்போது கேட்கும் போது 98 சதவீத நிவாரண நிதி விநியோகிக்கப்பட்டது என்று கூறினார்கள். இதற்கிடையே தான் தென் மாவட்டங்களிலும் மழை, வெள்ளம் வந்துவிட்டது. அவர்களுக்கும் நிவாரணம் அறிவித்து இருக்கிறேன். அதையும் உடனே வழங்கிடுவோம்.
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தேன். அப்போது மக்கள் மகிழ்ச்சியாக வரவேற்றனர்.. பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில், இன்னல்களுக்கு மத்தியில் என்னை பார்த்து மகிழ்ச்சியோடு வரவேற்றதை பார்த்து நான் புல்லரித்து போனேன். ஆனால் இன்னைக்கு அர்த்தம் இல்லாமல் குறை கூறுகிறார்கள். அரசுக்கு உதவியாக.. எந்த கட்சியாக இருந்தாலும் அரசு கூட இருந்து மக்கள் பணி ஆற்றியிருக்க வேண்டும். அப்படி யாரும் வந்தார்களா என்றால் இல்லை. இந்த மாதிரி நேரத்திலேயும் அரசியல் செய்ய வந்துவிடுகிறார் எடப்பாடி பழனிசாமி.
இப்போது பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கபட நாடகம் ஆடுகிறார் எடப்பாடி பழனிசாமி. பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா? இவர் நாடகத்தை பார்த்து மக்கள் நிச்சயமாக ஏமாற மாட்டார்கள். இந்தியா கூட்டணி தான் அடுத்து ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications