இபி பில்.. அதென்ன புதுசா சேவைக்கட்டணம்? உண்மையா? மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சென்னை: ஏசி, வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்படுத்தும் வீடுகளில், சேவைக்கட்டணம் விதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், "தமிழகத்தில் மின் சாதன பயன்பாட்டை பொருத்து கூடுதல் கட்டணம் வசூல் கிடையாது" என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கமளித்துள்ளது.
அக்னி வெயில் தொடங்கவில்லை என்றாலும் கூட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக இயல்பாகவே மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. கோடை காலத்தில் மின்சார பயன்பாடு அதிகரிப்பதும், குளிர்காலத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடப்பதுதான். இப்படி இருக்கையில் மின்சார வழங்கல் விதிகளில் திருத்தம் செய்ய அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் சமீபத்தில் ஒரு கோரிக்கை ஒன்றை வைத்தது.

அதன்படி ஒவ்வொரு வீடுகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் உபயோகிக்கப்பட்டால் அதற்காக வீட்டின் உரிமையாளர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதாவது, ஒரு வீட்டுக்கு 10 கிலோவாட் மின்சாரம் என்று ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த அளவைவிட அதிகமாக 11 கிலோவாட் அளவில் மின்சாரம் எடுக்கப்பட்டால் எத்தனை முறை கூடுதல் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதோ அத்தனை முறை அபராதம் செலுத்த வேண்டும்.
இரு மாத மின்சாரக் கட்டணத்தில் ஒரு விழுக்காடு அபராதமாக பெறப்படும். ஓராண்டில் மூன்று முறைக்கு மேல் அபராதம் செலுத்தினால், அவர்கள் கூடுதல் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என மின்சார வாரியம் கொடுத்த பரிந்துரையில் கூறியுள்ளது. மின்சார வாரியத்தின் இந்த கோரிக்கைக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், "குளிரூட்டி உள்ளிட்ட கருவிகளுக்காக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்தப்படுகிறது.
அவ்வாறு இருக்கும் போது அதற்கும் கூடுதலாக தண்டம் விதிப்பது நியாயமற்றது. ஏற்கனவே ரூ.12,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதத்தில் மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இத்தகைய சூழலில் அதிக மின் பயன்பாட்டுக்காக தண்டம் விதித்தால் மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது! மாதத்திற்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் கணக்கிடப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
மின்வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் சேவை நோக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மக்களை கொடுமைப்படுத்தும் வகையில் கட்டண சுமையை ஏற்றக் கூடாது. எனவே, அதிக மின்சாரம் எடுப்பதற்காக தண்டம் விதிக்கும் முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கமளித்துள்ளது. அதில், 'தமிழகத்தில் மின் சாதன பயன்பாட்டை பொருத்து கூடுதல் கட்டணம் வசூல் கிடையாது' என்று கூறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications