ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்! நீண்ட நாட்களுக்கு பின் நிர்வாகிகள் உற்சாகம்! தேமுதிக பொதுக்குழு ருசிகரம்
சென்னை: தேமுதிக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் அக்கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் திருவேற்காடு ஜி.டி.என்.பேலஸ் மஹாலில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் திரளான நிர்வாகிகளும், தொண்டர்களும் வருகை தந்துள்ளனர். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், பெரும்பாலானோர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து நேரடியாக பொதுக்குழு நடைபெறும் திருமண மண்டபத்திற்கே அதிகாலையில் வந்துவிட்டனர்.

அங்குள்ள குளியலறையிலேயே குளித்துக் கிளம்பி பொதுக்குழுவுக்கு தயாராகிவிட்டனர். இதனால் விடுதிகளில் அறை எடுக்கும் செலவு பலருக்கு மிச்சம். நீண்ட இடைவெளிக்கு பிறகு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததால் பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டதுடன் தங்கள் பகுதியில் கட்சியின் நிலைமை குறித்து மனம் விட்டு பேசிக்கொண்டனர். அதே போல் தங்கள் தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குறித்தும் விவாதித்துக்கொண்டனர்.
''நாளைய முதலமைச்சர் கேப்டன்.. நாளைய முதலமைச்சர் அண்ணியார்..'' என தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். பொதுக்குழுவில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு பெயர், ஊர், உள்ளிட்ட விவரங்களுடன் அடையாள அட்டைகளும் வழங்கப்படுகின்றன. இன்றைய தினம் வளர் பிறை என்பதால் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு தேமுதிக இளைஞரணிச் செயலாளர் பதவி தருவது குறித்தும் பிரேமலதாவுக்கு செயல் தலைவர் பொறுப்பு வழங்குவது பற்றியும் பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடல்நலம் நன்றாக இருந்தவரை அவர் அடிக்கடி செல்லும் கோவில் திருவேற்காடு கருமாரியம்மன் கோவில். அதேபோல் அவர் உடல் நலக் குறைவால் வீட்டில் ஓய்வில் இருந்தாலும் பிரேமலதா திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு அடிக்கடி சென்று வருகிறார். இதனால் தான் கட்சியின் பொதுக்குழுவை கோயம்பேடு தலைமை அலுவலகத்திற்கு பதில் திருவேற்காட்டிலேயே இந்த முறை நடத்துகிறார் பிரேமலதா விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications