சென்னையில் குப்பைத்தொட்டியில் குழந்தை உடல்.. 'அடக்கம் செய்ய கூட காசு இல்லை'.. கண்ணீர் விட்ட தந்தை
சென்னை: அடக்கம் செய்ய பணம் இல்லாததால் இறந்து பிறந்த பச்சிளம் குழந்தையை தந்தையே குப்பைத்தொட்டியில் போட்டு சென்றுள்ள சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேனியில் உள்ள சிஎம்கே சாலையில் சம்பவத்தன்று சணல் சாக்குப்பையில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு பச்சிளம் குழந்தை கிடந்தது.
மேலும் அந்த பகுதியில் சுற்றித்திருந்த சில நாய்கள் அந்த பச்சிளம் குழந்தையின் உடலை கவ்வி, குதறியபடி இழுத்துக்கொண்டிருந்தது. இதை கவனித்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பச்சிளம் குழந்தையின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
'நுபுர் சர்மாவை கொல்வதுதான் டாஸ்க்'.. உபியில் கைதான பயங்கரவாதி பகீர்.. போலீசார் திடுக்கிடும் தகவல்!
போலீசார் விசாரணை
இதையடுத்து அவர்கள் நாய்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். பின்னர் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை உடனடியாக மீட்டு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் அந்த குழந்தையை யார் குப்பைத்தொட்டியில் வீசி சென்றது? என்பது குறித்து அப்பகுதியில் விசாரித்தனர். மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து போலீசார் திருவல்லிகேனியில் உள்ள கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் சென்று விசாரித்தனர்.
இறந்து பிறந்த குழந்தை
அப்போது அந்த மருத்துவமனையில் தான் அந்த குழந்தை பிறந்தது தெரியவந்துள்ளது. மேலும் அந்த குழந்தை குறை மாதத்தில் இறந்து தான் பிறந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இறந்த குழந்தையை குப்பைத்தொட்டியில் போட்டு சென்ற தனுஷ்-கவிதா தம்பதியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் தனுஷ் தான் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசியதாக கூறினார். இதையடுத்து தனுசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனுஷ் கூறிய தகவல் போலீசாரை வியப்படைய செய்தது.
அடக்கம் செய்ய பணம் இல்லை
இது குறித்து தனுஷ் கூறுகையில், ''எங்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் மனைவி கர்ப்பம் ஆனாள். இதனால் நான் மகிழ்ச்சியடைந்தேன். 4 மாதங்கள் ஆகிய நிலையில் திடீரென மனைவிக்கு வயிற்றில் வலி ஏற்பட்டது. இதனால் கஸ்தூரிபா ஆஸ்பத்திரியில் அனுமதித்தேன். அங்கு அந்த குழந்தை இறந்து பிறந்தது. இதையடுத்து மருத்துவர் குழந்தையை அடக்கம் செய்யும் படி கூறினார். ஆனால் குழந்தையை அடக்கம் செய்வதற்கு 3 ஆயிரம் ரூபாய் செலவு ஆகும். ஆனால் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. இதனால்தான் நான் குழந்தையை சணல் சாக்குப்பையில் சுற்றில் குப்பைத்தொட்டியில் போட்டு விட்டேன்" என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
போலீசார் உதவி
தனுஷ் கூறிய தகவலை கேட்டு மனம் உருகிய போலீசார் குழந்தையின் உடலை அடக்கம் செய்ய முன்வந்தனர். அதன்படி தன்னார்வலர்கள் உதவியுடன் போலீசார் தனுஷின் குழந்தையை கிருஷ்ணாபேட்டையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து கொடுத்ததனர். தொடர்ந்து குழந்தையை தனுஷ் அடக்கம் செய்தார். இறந்த குழந்தையை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த தனுசுக்கு போலீசார் உதவிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.