பாமக கட்சிக்குள் ஏற்பட்ட "ரெட்ரோ" மோதல்.. அப்பா - மகன் சண்டை உச்சம்.. பாசம் இழந்த "தாஸ்" குடும்பம்
சென்னை: தைலாபுரம் தோட்டம் மிக காட்டமாக இருக்கிறது. மகன் அன்புமணிக்கு எதிராகவும், கட்சி இன்னும் எனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்றும், தமிழகத்தின் பால்தாக்கரே நான் தான் என்றும் நிருபிக்கும் வகையில் தான் டாக்டர் ராமதாசின் ஆக்சன்கள் காட்டிக்கொண்டிருக்கின்றன. இதனை தமிழக அரசியலில் உறுதிப்படுத்துவதற்காகத்தான், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், அணித்தலைவர்கள் என கட்சியின் அனைத்துக் கட்டமைப்பிலும் உள்ள முக்கிய நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தினார்.
ஆனால், இந்த கூட்டங்களில் 15 சதவீத ஆட்களே தோட்டத்திற்கு சென்றனர். மீதமுள்ள 85 சதவீத நிர்வாகிகள் அன்புமணியின் பின்னால் திரண்டனர். அவர் உருவாக்கிய சென்னை அலுவலகத்தில் திரண்டார்கள். தோட்டத்துக்குச் சென்ற 15 சதவீத ஆட்களிலும் 5 சதவீத ஆட்கள் அன்புமணியின் ஆட்கள் தான். தோட்டத்தில் என்ன நடக்கிறது ? ராமதாசின் திட்டம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் பொறுட்டே தனது ஆட்களை தோட்டத்துக்கு அனுப்பி வைத்தார் அன்புமணி. நான் அழைப்புவிடுத்தும் 85 சதவீத நிர்வாகிகள், கூட்டத்தை புறக்கணித்ததை டாக்டர் ராமதாசால் ஜீரணித்திக் கொள்ள முடியவில்லை. அதனால் நேற்று இரவு தைலாபுரம் தோட்டத்தில் தனது குடும்பத்தினரிடம் ஏகத்துக்கும் கொந்தளித்திருக்கிறார். அப்போது ஜிகே மணி, வடிவேல் ராவணன் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்களும் அங்கு இருந்துள்ளனர். அப்போது, எனக்கே அரசியல் பாடம் நடத்துகிறானா? (அன்புமணி) அவனுக்கு நான் யார் என்று காட்டுகிறேன் என்று ஆவேசப்பட்ட டாக்டர் ராமதாஸ், அவனையும் கூட்டத்துக்கு வராத அத்தனை நிர்வாகிகளையும் கட்சியிலிருந்து நீக்குகிறேன்; அதற்கான கடிதத்தை ரெடி செய்யுங்கள் என்று ஜிகே மணிக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

அவரது இந்த ஆவேசத்தைக்கண்டு மிரண்டுபோன அவரது குடும்பத்தினர், கட்சியை விட்டு நீக்கும் முடிவெல்லாம் எடுக்கக் கூடாது என்று ராமதாசை ஆசுவாசப்படுத்தியுள்ளனர். அவசரப்படாதீர்கள் அய்யா, கூட்டத்துக்கு ஏன் வரவில்லை என்று புறக்கணித்த நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புவோம். பொறுமையாக இருங்கள் என்று ஜிகே மணி , டாக்டரை அமைதிப்படுத்தியிருக்கிறார். நீண்ட நேர சமாதானத்துக்குப் பிறகே டாக்டர் உறங்க சென்றார்.
இதற்கிடையே, டாக்டரின் ஆவேசத்தை அறிந்த அன்புமணி, என்னை நீக்கும் அதிகாரம் அவருக்கு யார் கொடுத்தது ? என்னை அவர் நீக்கினால், அவரை நான் நீக்குகிறேன். கட்சியின் நிறுவனர் பதவிக்கு நீக்கும் அதிகாரம் கிடையாது என்பதை கட்சியின் விதிகளைச் சுட்டிக் காட்டி நான் பதிலடி தருகிறேன். பாமகவை காப்பாற்ற வேண்டுமாயின் இந்த நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன் என்று அன்புமணி பங்குக்கு அவரும் ஆவேசம் காட்டியிருக்கிறார். உடையும் சூழல்களுக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது பாமக. ஒருவேளை பாமக உடைந்தால், அன்புமணியின் தலைமையில்தான் நிர்வாகிகள் அணி வகுப்பார்கள்.
கட்சியின் கட்டமைப்பில் பெரும்பான்மை பலம் அன்புமணி பக்கம் இருப்பதால், தேர்தல் ஆணையத்தை அன்புமணி அணுகும் பட்சத்தில் அவர் தலைமையிலான பாமகதான் உண்மையான பாமக என்று தீர்ப்பு வருவதற்கு அதிக வாய்ப்பு. இதனை உணர்ந்துள்ள மாநில நிர்வாகிகள், பாமக உடைந்து விடக்கூடாது என்கிற யோசனையில் டாக்டர் அய்யாவை அமைதிப்படுத்தியும் சமாதானப்படுத்தியும் வருகிறார்கள்.
இந்த சமாதானத்தில் அப்பாவும் மகனும் மீண்டும் ஒன்றானால், கௌரவத் தலைவர் பதவியில் ஜிகே மணி இருக்கக் கூடாது; அவரை உங்கள் பக்கத்தில் உங்களுக்கான ஆலோசகராக வைத்துக்கொள்ளுங்கள்; கட்சியில் அவருக்கு எந்த பதவியும் இருக்கக்கூடாது என்று அன்புமணி தரப்பில் கோரிக்கை வைக்கப்படுமாம்.












Click it and Unblock the Notifications