கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம்! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
சென்னை: கொரோனா பாதித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய், இழப்பீடு வழங்கும் உத்தரவை செயல்படுத்துவதற்கு தமிழக அரசின் அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா நிவாரணம் வழங்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் இருந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு மாநில அரசுகள் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ரயில்வே ஸ்டேஷன் போன்ற கூட்டம்.. கொரோனா பரவும் ஹாட்ஸ்பாட்டாக மாறும் டெல்லி விமான நிலையம்?
பேரிடர் மேலாண்மை ஆணையம்
கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மாநில அரசுகள் ரூ.50 ஆயிரம் வழங்கத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பேரிடர்மேலாண்மை நிதியில் இருந்து இதை மாநில அரசுகள் வழங்கவேண்டும், மாவட்ட பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்தோ அல்லது மாவட்ட நிர்வாக அமைப்புகளின் மூலமோ இந்த நிதியை வழங்கலாம். இதுவரை, ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளுக்கு மட்டுமின்றி, மறு அறிவிப்பு வரும் வரை, வரும் காலங்களில் ஏற்படும் கொரோனா உயிரிழப்புகளுக்கும் இந்த இழப்பீடு அறிவிப்பு பொருந்தும்.
இழப்பீடு வழங்கப்படும்
கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் போது உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் இந்த இழப்பீடு வழங்கப்படும். கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு மரணம் எனச் சுகாதாரத் துறை அமைச்சர் குறிப்பிட்ட மரணங்கள் அனைத்துக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படும். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தேவையான ஆவணங்களை, மாநில அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதை மாவட்ட தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சரிபார்த்து அதற்கான நிதியை வழங்க ஏற்பாடு செய்வார்கள். இது தொடர்பான புகார்களை மாவட்ட துணை ஆட்சியரை கொண்டிருக்கும் மாவட்ட அளவிலான குழுவிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளிக்கலாம். ஒருவேளை, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண நிதி மறுக்கப்பட்டால், அதற்கான காரணத்தைத் தெளிவாகக் குறிப்பிடவேண்டும். இவ்வாறு மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் கூறியிருந்தது.
யாருக்கு பொருந்தும்
சில மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரண நிதியை சம்பந்தப்பட்ட அரசுகள் ஏற்கெனவே அறிவித்திருந்திருந்தன. ஆனால், அவ்வாறு அறிவிக்காத மாநிலங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்ற வகையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
நீதிமன்றத்தில் வழக்கு
தமிழக அரசு இதுபோன்ற இழப்பீட்டு தொகையை வழங்காமல் இருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று, தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த நிவாரணத் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நீதிபதிகள் அப்போது உத்தரவிட்டிருந்தனர்.
50 ஆயிரம் நிவாரணம்
இந்நிலையில், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் வழங்குவது தொடர்பாக, இன்று, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசு அதில் தெரிவித்துள்ளது.
யாருக்கு பொருந்தாது
முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே நிவாரணம் பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம் நிவாரணம் பெற்றவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தாது என்று, அரசு தெரிவித்துள்ளது.