Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றவிசாரணை தீர்மானம்.. ஏன் பலவீனமானது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்றத்தில் 120 எம்பிக்கள் சேர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். திருப்பரங்குன்றனம்தீர்ப்பு விவகாரத்திற்காக இவ்வளவு பெரிய முடிவினை எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு எடுத்துள்ளன. உண்மையில் உயர் நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியுமா என்றால்.. அது நிச்சயம் முடியும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968 ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது.

உயர் நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியுமா.. நடைமுறை என்ன?

இந்திய அரசியலமைப்பின்படி, நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை ஆங்கிலத்தில் proven misbehaviour என்று அழைப்பார்கள்.. தவறான நடத்தை உறுதிசெய்யப்பட்டால் பதவி நீக்கம் செய்ய முடியும். அதேபோல் திறமையின்மை என்ற காரணத்தின் பேரிலும் ஒரு நீதிபதியை நீக்க முடியும்.

The impeachment motion against Justice G R Swaminathan in Parliament Why is it weak

நீதிபதிகளை நீக்கும் விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டம் கூறுவது என்ன?

குறிப்பிட்ட நீதிபதியின் தவறான நடத்தை என்று எதை எல்லாம் அழைக்கலாம். ஒரு நீதிபதி மதசார்பற்றவராக இருக்க வேண்டும். அதேபோல் நீதிபதிகள் தங்கள் பதவிப் பிரமாணம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான விசுவாசத்திற்கு மட்டுமே விடையளிக்கக் கடமைப்பட்டவர்கள், அரசியல் அழுத்தங்களுக்கோ அல்லது கருத்தியல் அழுத்தங்களுக்கோ அல்ல .அப்படி அடிபணிந்து நேர்மையற்றவராக இருந்தால் பதவி நீக்க முடியும். மொத்தத்தில் தவறான நடத்தையின் பேரில் தான் நீக்க முடியும். அதற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.அதனை ஏற்று குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்க வேண்டும். அப்படித்தான் நீக்க முடியும்.

குடியரசுத் தலைவரின் ஆணை

ஒரு நீதிபதியை நீக்குவதற்கான குடியரசுத் தலைவரின் ஆணை, பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் தீர்மானத்திற்குப் பின்னரே பிறப்பிக்கப்பட முடியும் என்றாலும் அந்தத் தீர்மானத்தை ஆளும் கட்சி தனக்கு எதிரான நீதிபதியை பழிவாங்க பயன்படுத்திவிடக்கூடாது என்பதில் சட்டம் தெளிவாக இயற்றப்பட்டுள்ளது. இதன்படி அவையின் வருகை தந்து வாக்களித்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கு குறையாத பெரும்பான்மை இருக்க வேண்டும். இது கிட்டத்தட்ட ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ கொண்டுவந்து நிறைவேற்ற சாத்தியமே இல்லை.. ஏனெனில் அந்த அளவிற்கு பலம் கிடைப்பது அபூர்வம்.. மொத்தத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சேர்ந்து தான் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இதனை அதே பாராளுமன்ற அமர்வின்போது குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு நிபந்தனைகள் உள்ளது. எடுத்த உடனே தீர்மான நோட்டீஸ் கொடுத்து நீக்க முடியாது.

நீதிபதிகள் (விசாரணை) சட்டம் கூறுவது என்ன?

நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968, உயர் நீதிமன்ற நீதிபதியை நீக்குவதற்கான விரிவான நடைமுறையையும், குடியரசுத் தலைவருக்கு பாராளுமன்றம் தீர்மானத்தை சமர்ப்பிக்கும் செயல்முறையையும் கோடிட்டுக் காட்டுகிறது.

நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின் கீழ் உள்ள நடைமுறை என்ன?

1. பாராளுமன்றத்தில் தீர்மானத்திற்கான நோட்டீஸ்:

பாராளுமன்றத்தின் ஏதேனும் ஒரு அவையில், மக்களவையில் குறைந்தது 100 உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களவையில் குறைந்தது 50 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும்.

இந்த நோட்டீஸை மக்களவை சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

நோட்டீஸை அனுமதிப்பதா அல்லது நிராகரிப்பதா என்று முடிவெடுப்பதற்கு முன், சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவர் ஆகியோர் அவர்கள் கூறும் காரணங்களை ஆலோசிக்கலாம்.

2. மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தல்:

எம்பிக்கள் கொண்டுவர விரும்பும் தீர்மானம் சபாநாயகரால் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும் வரை அது நிலுவையில் வைக்கப்படும்.

இந்தக் குழுவில் அடங்குபவர்கள்:

ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி (தலைமை நீதிபதி உட்பட)

ஒரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி

ஒரு புகழ்பெற்ற சட்ட வல்லுநர்

ஒரே நாளில் இரு அவைகளிலும் நோட்டீஸ்கள் சமர்ப்பிக்கப்பட்டால், சபாநாயகரும் தலைவரும் இணைந்து ஒரு கூட்டுக் குழுவை அமைப்பார்கள். வெவ்வேறு தேதிகளில் சமர்ப்பிக்கப்பட்டால், பிந்தைய நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்.

3. குழுவின் செயல்பாடுகள் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள்:

குழுவின் முடிவு:

நீதிபதி குற்றமற்றவர் என்று கண்டறியப்பட்டால்: மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. நிலுவையில் உள்ள தீர்மானம் அப்படியே கைவிடப்படும்.

நீதிபதி குற்றவாளி என்று கண்டறியப்பட்டால்: தீர்மானம், குழுவின் அறிக்கையுடன், அது நிலுவையில் உள்ள அவையில்(அவைகளில்) பரிசீலிக்கப்படும்.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றுதல்:

இரு அவைகளும் தேவையான பெரும்பான்மையுடன் தீர்மானத்தை நிறைவேற்றினால், நீதிபதியின் தவறான நடத்தை அல்லது திறமையின்மை நிரூபிக்கப்பட்டதாக கருதப்படும்.

நீதிபதியை நீக்குவதற்கான தீர்மானம், அதே அமர்வில் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும்.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனைச் சுற்றியுள்ள சர்ச்சை என்ன?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் கார்த்திகை தீபம் தொடர்பாக உத்தரவு தான் இந்தத் தீர்மானத்திற்கு மூல காரணமாகும். மதுரை திருபரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி மலையின் உச்சியில் உள்ள 'தீபத்தூண்' தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அவர் அனுமதி அளித்தார். இந்த மலையில் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தர்காவும் உள்ளது. நீதிபதி தனது உத்தரவில், கோவில் சொத்தின் மீதான உரிமையை நிலைநாட்ட வேண்டியதன் அவசியம் கருதியே தீபம் ஏற்ற உத்தரவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் கோவில் நிர்வாகம் உத்தரவுக்கு இணங்கவில்லை. இதனால் உடனே மேல் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று மத்திய பாதுகாப்புபடை வீரர்களை உதவிக்கு அனுப்பி உத்தரவிட்டார். இது சர்ச்சையானது.

தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வாதம் என்ன

இந்த உத்தரவு, கோவில் சடங்குகளில் நீதிமன்ற தலையீட்டை அனுமதிக்காத 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஒரு அமர்வின் தீர்ப்பை மீறுவதாகவும், சட்டப் பேரவைத் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்குள் நீதிபதியின் முடிவு சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கடுமையாக வாதிட்டு வருகிறார்கள்

நீதிபதி பிறப்பித்த உத்தரவையடுத்து, தீர்ப்பை அமல்படுத்தியே ஆக வேண்டும் என்று ஏராளமான இந்து அமைப்பினர் மலையேற முயன்றதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் கூட்டங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்தனர். மாநில அரசின் மேல்முறையீடுகளை உயர் நீதிமன்ற அமர்வு நிராகரித்த நிலையில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. உச்ச நீதிமன்றம் மாநிலத்தின் மனுவை ஏற்றுக்கொண்டது, ஆனால் விசாரணைக்கான தேதியை இன்னும் நிர்ணயிக்கவில்லை.

பதவி நீக்கத் தீர்மானம் ஏன்?

இந்த வாரம், தி.மு.க. தலைமையிலான 107 INDIA கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நீதிபதி சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்யக் கோரி நோட்டீஸ் அளித்திருக்கிறார்கள். தீர்மானத்தின் நோட்டீஸில், நீதிபதி சுவாமிநாதன் தொடர்ச்சியான வழக்குகளில் மூத்த வழக்கறிஞர் எம். ஸ்ரீசரண் ரங்கநாதனுக்குச் சாதகமாகச் செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த குற்றச்சாட்டை அந்த வழக்கறிஞர் மறுத்துள்ளார்.

இந்தியா கூட்டணிக் கட்சிகள் அளித்த பதவி நீக்க நோட்டீஸில், நீதிபதி சுவாமிநாதனின் நடத்தை "பக்கச்சார்பற்ற தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நீதித்துறையின் மதச்சார்பற்ற செயல்பாடு குறித்து தீவிர கேள்விகளை எழுப்புவதாக" குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்திய வரலாற்றில் ஆளும் கட்சி சார்பு நீதிபதி என்று எந்த நீதிபதியையும் இப்படி எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக விமர்சித்ததும் இல்லை.. ஒருதீர்ப்புக்காக ஒருநீதிபதியை பதவியை விட்டே நீக்கவேண்டும் என்று பொங்கி எழுந்து நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் கொடுத்ததும் இல்லை. இந்திய வரலாற்றில் இதுவரை நீதித்துறை சந்திக்காத புதிய சிக்கலாக பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சனைக்குதீர்வு காணப்படாவிட்டால் ஆளும் பாஜக அரசுக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த நீதித்துறைக்கு பெரிய களங்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. இப்படியான பெரிய சிக்கலை எதிர்க்கட்சிகள் எழுப்பியதை ஆளும் பாஜக சற்றும்எதிர்பார்க்கவில்லை.. இதற்கு முற்றுப்புள்ளிவைக்கவே விரும்புகிறது. அதற்காக கடும் எதிர்வினையாற்ற தொடங்கி உள்ளது.

இதை உறுதி செய்யும்விதமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்தார். ஒரு நீதித்துறை தீர்ப்பின் மீது ஒரு நீதிபதி பதவி நீக்கத்தை எதிர்கொள்வது முன்னோடியில்லாதது.. இது எதிர்க்கட்சிகளின் "சமாதானப்படுத்தும் அரசியல்" என்று கடுமைக குற்றம் சாட்டினார்.

அதேநேரம் 56 முன்னாள் நீதிபதிகள் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க நோட்டீஸை எதிர்த்து ஒரு பொதுக் கடிதம் எழுதினர். இந்த நடவடிக்கையை, ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் சித்தாந்த அல்லது அரசியல் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப் போகாத நீதிபதிகளை "அச்சுறுத்துவதற்கான" அப்பட்டமான முயற்சி என்று அந்தக் கடிதத்தில் முன்னாள் நீதிபதிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் பலவீனமாக இருப்பது ஏன்?

நீதித்துறைத் தீர்ப்பு தவறான நடத்தை கிடையாது

இந்தியாவில் பதவி நீக்கம் என்பது அரசியலமைப்பின்படி "நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது திறமையின்மை" என்பதற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. வெறும் நீதித்துறை பிழை, சர்ச்சைக்குரிய காரணம் அல்லது மக்கள் விரும்பாத உத்தரவுகளை அரசியலமைப்போ அல்லது நீதிபதிகள் (விசாரணை) சட்டமோ "தவறான நடத்தை"யாகக் கருதுவதில்லை.

போதிய ஆதாரம் இல்லை

தீர்மானத்தில் உள்ள கூற்றுகள் உறுதியான ஆதாரங்களால் இணைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே நீதிபதிகள் விசாரணைச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட உயர் தரங்களைப் பூர்த்தி செய்யாமல் போகலாம் என்கிறார்கள். பதவி நீக்கத் தீர்மானம், நிரூபிக்கப்பட்டால் தவறான நடத்தை அல்லது திறமையின்மைக்கு ஈடான குறிப்பிட்ட நிகழ்வுகளை வெளிப்படுத்தவில்லை என்றால், சபாநாயகர் தொடக்கத்திலேயே அதை அனுமதிக்க மறுக்கலாம்.

தீர்ப்பை ரத்து செய்ய பதவி நீக்கம் ஒரு வழி அல்ல

பதவி நீக்கத் தீர்மானம் என்பது ஒரு நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்வதற்கான கருவியாக மாற முடியாது. சட்டத்தில் அதற்குரிய கருவிகளும் நிவாரணங்களும் உள்ளன. பதவி நீக்கம் என்பது "பின்வாசல் மேல்முறையீடு" செய்யும் வழிமுறை கிடையாது; இது ஒரு நீதிபதியின் நேர்மையின்மை மற்றும் திறமையின்மைக்காகவே பதவிநீக்க தீர்மானத்தை கையில் எடுக்க முடியும். மாறாக இப்போது நடந்திருப்பது. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பழிவாங்கல் என்றே பாஜக விமர்சிக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+