மேற்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது? ’கொங்கு’ கை ஓங்குவதால் திமுக பக்கம் சாயும் ‘தலைகள்’! பரபர அதிமுக
சென்னை : கொங்கு மண்டலத்தின் அதிமுக நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கப்படும் நிலையில், தற்போது தென் மாவட்டத்திலுள்ள முக்கலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் குறைந்துள்ளதாகவும், இதனால் சில மூத்த நிர்வாகிகள் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு தாவ தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும், மறைந்த தமிழக முதல்வருமான ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.
அதற்கு முக்கிய காரணம் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த சசிகலா உள்ளிட்டோர் ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தது காரணம் என கூறப்படுகிறது. ஜெயலலிதா இக்கட்டான காலங்களில் இருந்தபோது, ஆட்சியை ஒப்படைக்கும் அளவிற்கு முக்கியத்துவம் இருந்தது.
திமுக நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் காப்பு! சினிமா சூட்டிங் பணம் மூலம் நூதனமான சதுரங்க வேட்டை!
சசிகலா நீக்கம்
தொடர்ந்து அவரது மறைவிற்குப் பிறகு அதிமுகவில் இருந்து சசிகலா ஓரங்கட்டப்பட்டதும் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் குறைந்து வருவதாக தெரிவிக்கின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் குறித்து அதிமுக அரசு வெளியிட்ட அரசாணையால் தென்மாவட்டங்களில் இருக்கும் முக்குலத்தோர் சமுதாய அதிருப்தியால் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக தோல்வியை தழுவியது.
திமுகவுக்கு தாவும் நிர்வாகிகள்
மேலும் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதிமுகவில் இருந்த முக்குலத்தோர் சமுதாயத்தினர் திமுக மற்றும் பாஜக பக்கம் நகர தொடங்கினர். கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருந்தாலும் தென் மாவட்டங்களில் வாக்கு வங்கி குறைய தொடங்கியது. முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த போதிலும் இன்னும் அதிக முக்கியத்துவம் வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்றார் போல் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் ராஜ்ய சபா தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.
நிர்வாகிகள் வலியுறுத்தல்
சனிக்கிழமை திருநெல்வேலியில் நடைபெற்ற இசக்கி சுப்பையா இல்ல விழாவில் கலந்து கொண்ட ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடம் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற ராஜ்ய சபா தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்த்திற்கு ஜெயலலிதா பதவி வழங்கிய நிலையில், தற்போதைய தலைமை வழங்கவில்லை என்ற விபரத்தையும் எடுத்து சொல்லியுள்ளனர். கட்சியில் இருக்கும் முக்குலத்தோர் சமுதாய நிர்வாகிகள் சொன்ன கருத்தை பரிசீலனை செய்வதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.
கட்சி மாற திட்டம்
ஏற்கனவே முக்குலத்தோர் சமுதாயத்தினர் சசிகலா , டிடிவி தினகரன் பக்கம் போகாமல் தடுத்து வைத்திருந்த நிலையில் இந்த ராஜ்ய சபா தேர்தலில் முக்குலத்தோருக்கான முக்கியத்துவம் இல்லையெனில் வேறு கட்சிக்கு சிறகடித்து பறக்க தயாராகி விட்டதாகவும் தகவல் தெரிய வருகிறது. கொங்கு மண்டலத்தை கைக்குள் வைத்திருக்கும் அதிமுக தலைமை , முக்குலத்தோர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தென் மண்டலத்தையும் தன்வசம் வைத்திருக்குமா என்பது ராஜ்ய சபா வேட்பாளர்கள் அறிவிப்பை பொறுத்து இருக்கும் என்கின்றனர் அதிமுகவினர். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் முக்குலத்தோர் கோரிக்கையை அதிமுக தலைமை ஏற்றுக்கொள்ள கூடிய கட்டாயமும் இருந்து வருகிறது.