ரேஷன் அட்டை இல்லாதவர்களும் நிவாரணம் பெறலாம்.. இந்த தகவல்களை நிரப்பினால் போதும்! விண்ணப்ப விவரம் இதோ
சென்னை: மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், குடும்ப அட்டை இல்லாதோர் ரூ.6000 நிவாரண நிதியை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், அந்த அனுபவத்தை கொண்டு இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இருப்பினும் எண்ணூர் பகுதிகளில் மழைநீருடன் கச்சா எண்ணெய் கழிவுகளும் சேர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்ததால் இன்னமும் அப்பகுதி மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

ஒரே நாளில் 40 செ.மீ வரை மழை பெய்ததால்தான் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 100 மிமீ முதல் 1100 மி.மீ தான். ஆனால் இதில் மூன்றில் ஒரு பகுதி மழை கடந்த 4ம் தேதி பெய்திருக்கிறது. எனவேதான் வெள்ளம் வடிய அதிக நாட்கள் ஆகியுள்ளன. வெள்ளத்தில் ஏராளமான பொருட்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. சுமார் 4 லட்சம் வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதில் பெரும்பாலும் பைக்குகளும், ஆட்டோக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் சாமானிய மக்களின் வாழ்வில் கூடுதல் பொருளாதார சுமை ஏறியிருக்கிறது.
இதனை சமாளிக்க 4 மாவட்ட மக்களுக்கும் ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் இதில் சில சிக்கல்கள் எழுந்தன. அதாவது சென்னையில் வெளி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் நீண்ட காலம் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்களின் ரேஷன் அட்டை, அவர்களுடைய சொந்த மாவட்டத்தின் முகவரியில்தான் இருக்கும். அதேபோல சென்னையில் வசித்து வரும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்திருப்பார்கள். இவர்களுக்கான நிவாரணம் என்ன? அதேபோல அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் எப்படி வழங்கப்படும்? என்பது குறித்து கேள்விகள் எழுந்தன.
இதற்கு விளக்கமளித்த தமிழக அரசு, ரேஷன் கடைகளில் மேற்குறிப்பிட்டவர்களுக்காக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். அதை பூர்த்தி செய்து கொடுத்தால், உரிய ஆய்வுக்கு பின்னர் நிவாரண தொகை வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த விண்ணப்பத்தில் என்னென்ன கேட்கப்பட்டிருக்கிறது? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 1.வார்டு எண்: மண்டலம் எண்: தெரு பெயர்:
2.குடும்ப தலைவி/தலைவர் பெயர்
3.கைபேசி எண்
4.ஆதார் எண்
5.வீட்டு முகவரி
6.குடும்ப அட்டை எண்(இருப்பின்),
7.வங்கி கணக்கு விவரம்
வங்கியின் பெயர்:
கிளை:
கணக்கு எண்:
8.பாதிக்கப்பட்ட வீட்டின் வகை
குடிசை/நிரந்தர வீடு/அடுக்குமாடி குடியிருப்பு
9.பாதிப்பின் விவரம்
பகுதியாக பாதிக்கப்பட்டதா?
முழுவதுமாக பாதிக்கப்பட்டதா?
10. வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து துணிமணிகள், பாத்திரங்கள் பாதிக்கப்பட்டதா?
ஆம்/இல்லை
11. தண்ணீர் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதா?
ஆம்/இல்லை
போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இறுதியாக, மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மையானது என்பதை உறுதி செய்ய கையொப்பம் இட வேண்டும் என கேட்கப்படுகிறது. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஒப்படைத்துவிட்டால், அதற்கு சான்றாக ஒப்புகை ரசீதும் வழங்கப்படுகிறது. அதில், இந்த விண்ணப்பத்தை பெற்ற அலுவலரின் கையொப்பம் இருக்கும். இந்த தகவல்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications