செம்மஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனை உடனே இடிக்க வேண்டும்.. கண்டித்த நீதிபதிகள்... ஐகோர்ட் கெடு
சென்னை: செம்மஞ்சேரி போலீஸ் நிலையம் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாகவும், அதை அகற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் போலீஸ் ஸ்டேஷனை அகற்ற வேண்டும் என்றும், போலீஸ் நிலையத்தை உடனே அகற்றவில்லை என்றால் அனைத்து கட்டுமானங்களையும் அகற்ற உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தனர்.
நீர்நிலைகளையும், நீர் வழித்தடங்களையும் ஆக்கிரமித்து எந்தக் கட்டடமும் கட்டக்கூடாது என்பது நீதிமன்றத்தின் மிகத்தெளிவான விதிமுறையாக இருக்கிறது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் சட்ட விதிமுறைகளை மீறி, செம்மஞ்சேரி ஜே.ஜே. நகர் பகுதியில் உள்ள ஒரு நீர்ப்பிடிப்பு கால்வாயின் மீது இந்தக் காவல் நிலையம் கட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், நீர்நிலை ஆக்கிரமிப்பு காரணமாக மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.

இதையடுத்து "சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல் துறையே நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டடம் கட்டுவது ஏற்கத்தக்கதல்ல" என்று நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும், "நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது, ஆனால் அரசே ஆக்கிரமிப்பாளராக இருக்கக்கூடாது" என்றும் நீதிபதிகள் முன்பு கூறியிருந்தனர். மேலும் அந்தக் காவல் நிலையத்தை அகற்றிவிட்டு, நீர்நிலைக்குப் பாதிப்பு இல்லாத மாற்று இடத்தில் புதிய காவல் நிலையத்தைக் கட்ட அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்த வழக்கில் விரிவான வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், போலீஸ் நிலையத்தை உடனே அகற்றவில்லை என்றால் அனைத்து கட்டுமானங்களையும் அகற்ற உத்தரவிட நேரிடும். மேலும் நீர்நிலைகளை வகை மாற்றம் செய்த அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவோம். இந்த வழக்கை வருகிற 27-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்'' என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications