தமிழகத்தில் எம்பி, எம்எல்ஏக்களின் தூக்கத்தை தொலைக்க வைத்த சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: நாடு முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளின் விசாரணையை அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்கள் கண்காணிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. தற்போது ஐகோர்ட், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை வாய்தா கொடுக்காமல் விரைவாக விசாரித்து முடிக்கவேண்டும் என்று சிறப்பு கோர்ட்டுகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.
எம்பி, எம்எல்ஏ உள்பட மக்கள் பிரதிநிதிகள், தாங்கள் பதவி வகித்த காலத்தில் அல்லது வகித்து வரும் காலக்கட்டத்தில் முறைகேடாக சொத்து சேர்த்ததாக வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல் பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதாவும், தீர்ப்புகள் மிக தாமதாக வருவதாகவும் நாடு முழுவதும் பரவலாக புகார்கள் உள்ளது.

இந்த சூழலில் நாடு முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளின் விசாரணையை அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்கள் கண்காணிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கை அவ்வப்போது விசாரித்து, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்றம் கோர்ட்டுக்கு உதவும் நபராக (அமிக்கஸ்கியூரி) நியமிக்கப்பட்ட மூத்த வக்கீல் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆஜராகி, தமிழ்நாட்டில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது 193 வழக்குகளும், புதுச்சேரியில் 23 வழக்குகளும் என மொத்தம் 216 வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது என்றார்.
இந்த வழக்கு விவரங்களை பார்த்தபோது, ஏராளமான வழக்குகள் நீண்ட காலமாக விசாரணை முடியாமல், நிலுவையில் இருந்து வருவது தெரியவந்தது. இதற்கு காரணம், ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டு விதித்துள்ள இடைக்கால தடை உத்தரவினால், மேற்கொண்டு வழக்குகளை விசாரிக்க முடியாத நிலை கீழ் நீதிமன்றங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.
எனவே, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எதிரான வழக்குகளில் எத்தனை வழக்குகளுக்கு ஐகோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது என்ற விவரப்பட்டியலை 2 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இந்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களுக்குகு கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறோம்.
உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் தடை விதிக்காத வழக்குகளின் விசாரணையை சிறப்பு கோர்ட்டுகள் விரைவாக மேற்கொள்ளவேண்டும். அதுவும் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளை மிக விரைவாக விசாரிக்கவேண்டும். இதற்காக இருதரப்பினரும் தேவையில்லாமல் வாய்தா கேட்டால் கொடுக்கக்கூடாது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குற்றச்சாட்டு பதிவை கூட மேற்கொள்ளாமல் உள்ளது.
இதுபோன்ற வழக்குகளுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கி விசாரிக்கவேண்டும். இந்த வழக்குகளில் பலமுறை வாய்தா கொடுக்கப்பட்டுள்ளது. இதை தீவிரமாக தவிர்க்கவேண்டும். அதுமட்டுமல்ல குற்றச்சாட்டு பதிவு முடிந்துவிட்டதால், சாட்சி விசாரணையை விரைவாக முடிக்கவேண்டும். அதுவும் சாட்சியம் அளிக்க சாட்சிகள் கோர்ட்டுக்கு வந்திருந்தால், வாய்தா கொடுக்காமல், சாட்சி விசாரணை கண்டிப்பாக நடத்த வேண்டும். அதாவது இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளும், வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கவேண்டும் என்பதுதான். இந்த வழக்குகளை விசாரிக்கும் கீழ் கோர்ட்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதாக மூத்த வக்கீல் கூறினார்.
ஆகவே , வழக்கை விரைவாக விசாரிப்பதற்கு இடையூறாக உள்கட்டமைப்பு வசதி குறைபாடுகள் உள்ளதா? என்பது குறித்து உயர்நீதிமன்ற தகவல் தொழில்நுட்ப பிரிவு பதிவாளரிடம் இருந்து விவரம் கேட்டு ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்" இவ்வாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications