ஒரே கல்லில் 3 மாங்காய்? விசயமே வேற.. கேப்டன் வீட்டிற்கு விஜய் போனது ஏன் தெரியுமா?
சென்னை: தனது 'கோட்' படத்தில் விஜய்காந்த் தோற்றத்தை ஏஐ தொழில்நுப்டம் மூலம் பயன்படுத்தியதற்காக அனுமதி பெறுவதற்காகவே விஜய் பிரேமலதாவைச் சந்தித்தார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அதற்குப் பின் வேறு சில காரணங்கள் இருந்தது இப்போது தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் விஜய் கட்சி தொடங்கியதிலிருந்து எப்போது அவரது கொடியை அறிமுகப்படுத்துவார் என அவரது தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். அந்த ஆர்வத்திற்கு இன்று சரியான விருந்து வைத்துள்ளார் விஜய். பனையூரில் உள்ள அவரது கட்சியின் தலைமையகத்தில் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்து கட்சியின் கொள்கை விளக்கப்பாடலையும் வெளியிட்டுள்ளார்.

அடுத்து அவரது கட்சியின் மாநாடு விரைவில் நடக்கப்போகிறது. அதற்காக வேலைகள் நடைபெற்று வருகின்றன என்பதை விஜய் இந்தக் கொடி அறிமுகக் கூட்டத்தில் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார். இன்று கொடி அறிமுகக் கூட்டத்திற்கு முன்பாக 'கோட்' படத்தில் விஜயகாந்த்தின் தோற்றத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியதற்காக அவரது மனைவி பிரேமலதாவிடம் அனுமதி பெறுவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார் விஜய்.
இந்தக் கொடி அறிமுக விழாவை எதிரே வைத்துக் கொண்டு, அவர் அவசர அவசரமாக விஜயகாந்த் வீட்டுக்குச் சென்றிருக்க வேண்டிய தேவை இல்லை. கட்சிக் கொடிக்காக அறிமுகம் நடக்க உள்ள நிலையில், மக்களின் கவனம் அதன் மீதுதான் இருக்க வேண்டும் என ஒரு சாதாரண கட்சிக்காரர் கூட நினைப்பார். அப்படி இருக்கும்போது அதை விஜய் யோசிக்கமாட்டாரா? என்ற கேள்வி எழுந்தது. சொல்லப்போனால் விஜய்யின் திரையுலக வெற்றிக்கு விஜயகாந்த்தான் தொடக்கப்புள்ளி. அவரது அரவணைப்பில் வெற்றி பெற்றவர் விஜய்.
கட்சியின் கொடியை அறிமுகம் செய்வதற்கு முன்பாக விஜயகாந்த் ஆன்மா ஆசீர்வாதம் பெற வேண்டும் என விஜய் நினைத்துள்ளார். அதை மனதில் வைத்தே கொடி அறிமுக விழாவுக்கு முன்பாக விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று அவரது படத்திற்கு முன்பு ஆசி பெற்றுவிட்டு, கூடவே 'கோட்' பஞ்சாயத்தையும் சைலண்ட் ஆக முடித்துள்ளார் என்கிறார்கள்.

விஜயகாந்த் கட்சிக் கொடியில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் உள்ளன. அதேபோல விஜய் தன் கட்சிக் கொடியில் மஞ்சள், சிவப்பு வண்ணங்களைச் சேர்த்துள்ளார். இந்த இரண்டு நிறங்களை விஜய் ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது பற்றிப் பேசிய சினிமா விமர்சகர் அந்தணன், "விஜய்யின் குல தெய்வத்திற்கு உகந்த நிறம் சிவப்பு மஞ்சள் என்று சொல்கிறார்கள். அதற்காகவே அவர் அந்த இரண்டு வண்ணத்தைப் பயன்படுத்தி இருக்கிறார் என்று சொல்கிறார்கள். அதில் உண்மை இருப்பதைப் போலத்தான் தெரிகிறது. அவர் கட்சிக் கொடியை அறிமுகம் செய்வதற்கு முன்பே நேற்று மஞ்சள் பேண்ட் அணிந்திருந்தார். அதை வைத்துப் பார்க்கும்போது ஏதேனும் வேண்டுதல் இருக்கும் என்று யோசிக்கத் தோன்றுகிறது" என்கிறார்
அவர் சொல்வதைப்போலவே இன்று அறிமுகம் செய்யப்பட்ட கட்சிக்கொடியில் சிவப்பும் மஞ்சள் நிறமும் இருக்கிறது. அவர் எக்ஸ் தளத்தில் வைத்த பேனரில் கூட சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் இரண்டுதான் இருந்தன. ஏறக்குறைய இந்த சிவப்பு, மஞ்சள் என்பது சீமானின் கட்சிக் கொடியின் சாயலில்தான் உள்ளது. தமிழ்த் தேசியத்தைப் பேசுவதைப் போல வாகை மலர் இடம்பெற்றுள்ளது. கூட இரண்டு புறங்களிலும் யானை சின்னம் உள்ளன. அவை வெற்றியின் அடையாளமாக வைக்கப்பட்டுள்ளன. அதில் ஏதும் சந்தேகம் இருக்க வாய்ப்பு இல்லை.
இதே வேகத்தில் மாநாட்டைச் செப்டம்பரில் நடத்திவிடுவார் என்று தோன்றுகிறது. அதில் மறைமுகமாக சில தடைகளும் உள்ளன என்கிறார்கள். எப்போது தனக்கு எதிராக நடத்தப்படும் நெருக்கடிகள் குறித்து நேரடியாகக் கருத்துகளைச் சொல்ல விரும்பாதவர் விஜய். எனவே ஆளும் கட்சி சார்பில் அவரது மாநாட்டுக்கு ஏதோ நெருக்கடி தரப்படுவதாக வரும் தகவல்களுக்கு அவர் எந்தவித பதிலும் சொல்லாமல் தான் இருக்கிறார். முதலில் மாநாட்டுக்காக திருச்சி பக்கம் தவெக சார்பில் இடம் தேடியதாக சில தகவல்கள் வெளியாகின. அதற்கு அந்த மாவட்ட அமைச்சர் கொஞ்சம் இடையூறு கொடுத்ததாகப் பேச்சு அடிப்பட்டது. அது குறித்தும் சிலர் பேசி இருக்கிறார்கள். அதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை.
விஜய் இன்று அறிமுகம் செய்துள்ள கொடியின் விளக்கம் என்ன? அதற்கு வரலாற்று அர்த்தம் என்ன? என்பது பற்றி மாநாட்டில் தெளிவுபடுத்த இருப்பதாகக் கூறியுள்ளார். இதைக் கட்சிக்கொடியாக மட்டும் பார்க்கவில்லை, அடுத்த தலைமுறைக்கான ஒரு கொடி என்றும் அவர் தனது விருப்பத்தை முன்வைத்துப் பேசி இருக்கிறார். விஜய் மாநாடு எப்போது என்பது பற்றிப் பேசிய அந்தணன், "விஜய்க்கு இப்போது 'கோட்' படத்தை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வெளியிட்டுவிட வேண்டும் என்று விரும்புகிறார். மாநாட்டில் ஏதாவது பேசி படத்திற்குப் பிரச்சினையாகி விடக்கூடாது என்று அவர் நினைக்கிறார். ஆனால், விஜய் மனதில் மிகப்பெரிய அளவில் ஒரு மாநாட்டை நடத்திக் காட்ட வேண்டும் என்று கனவு, ஆசை இருக்கிறது. செப்டம்பர் 5 படத்தை ரிலீஸ் செய்துவிட்டு அதே மாதம் இறுதியில் மாநாட்டை வைத்துக்கொள்ளலாம் என்ற முடிவில் அவர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது" என்கிறார்.
மேலும் பிரேமலதா விஜயகாந்த்தை விஜய் சந்தித்ததற்குப் பின்னால் அரசியல் காரணம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதில் ஏதேனும் உண்மை உள்ளதா? என்ற கேள்விக்கும் அந்தணன் பதில் அளித்துள்ளார். அந்தச் சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை. ஆகவேதான் படத்தயாரிப்பாளர், இயக்குநர் ஆகிய படக்குழுவினருடன் அவர் போய் சந்தித்திருக்கிறார். அதில் கூட்டணி ரகசியம் எல்லாம் ஒன்று இல்லை. ஆனால், விஜய் தனது 69ஆவது படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஒரு நல்ல ரோல் கொடுக்க வாய்ப்பு உள்ளது.
ஏனென்றால் ஒரு காலத்தில் விஜய் வளர்ச்சிக்கு உதவியவர் விஜயகாந்த். அதனால் விஜய்க்கு ஒரு கடமை உள்ளது. அதைப் பலரும் சுட்டிக்காட்டிப் பேசியும் வருகின்றனர். அதை விஜய் உணர்ந்திருக்கிறார். இனிமேல் சினிமாவில் தொடரப் போவதில்லை என விஜய் முடிவு எடுத்திருப்பதால், சண்முக பாண்டியனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் உள்ளது. அடுத்து நடிக்கப் போவதுதான் கடைசி படம். அதைவிட்டால் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இறுதி வாய்ப்பு என்பதால் விஜய் நிச்சயம் செய்வார்.
மேலும் விஜயகாந்த் வீட்டிற்குப் போன விஜய் அரை மணிநேரம் அங்கே இருந்தார். அதில் 15 நிமிடங்கள் வரை விஜயகாந்த் மகன்களிடம் செலவிட்டுள்ளார். யோசித்துப் பார்த்தால் இந்தப் பேச்சின் போது விஜய் ஏதேனும் வாக்குறுதிகள் கொடுத்திருக்கலாம்"என்கிறார்.












Click it and Unblock the Notifications