மயிலாடுதுறையில் அந்த காட்சி.. 56 கேஸ் சிலிண்டர்கள்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்.. மக்களே இதை பாருங்க
சென்னை: கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் பரவி வரும் தகவல்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பொதுமக்களுக்குத் தடையின்றி எரிவாயு விநியோகம் செய்யப்படும் என்றும், தேவையற்ற வதந்திகலை நம்பி அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை, மயிலாடுதுறையில் நடந்துள்ள சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை தந்து வருகின்றன.. என்ன நடந்தது?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய தீவிர வாகன தணிக்கையில், சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட 56 வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர்கள் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள்
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மாவட்ட எல்லைகளில் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சீர்காழி புறவழிச்சாலையில் வந்த ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு வாகனத்தை அதிகாரிகள் நிறுத்திச் சோதனை செய்தபோது, அதில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 56 சிலிண்டர்கள் பிடிபட்டன.
இந்தச் சம்பவம் குறித்து வாகன ஓட்டுநரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்தச் சிலிண்டர்களுக்கான முறையான ஜி.எஸ்.டி. ரசீதுகளோ அல்லது போக்குவரத்துக்கான உரிய ஆவணங்களோ அவரிடம் இல்லை என்பது தெரியவந்தது.
வணிக ரீதியான பயன்பாட்டிற்கு இவ்வளவு பெரிய அளவிலான சிலிண்டர்களைக் கொண்டு செல்லும் போது சட்டப்பூர்வமான சான்றுகள் அவசியம் என்பதால், அதிகாரிகள் அந்த வாகனத்தை சட்டவிரோத போக்குவரத்துப் பிரிவின் கீழ் கொண்டு வந்தனர். முறையான வரி செலுத்தாமல் இவை கொண்டு செல்லப்பட்டதால், இது வரி ஏய்ப்பு முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மயிலாடுதுறையில் 56 சிலிண்டர்கள்
பறிமுதல் செய்யப்பட்ட 56 சிலிண்டர்களும் உடனடியாக சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டன. பிறகு இதற்கான உரிய வரி விதிப்பு மற்றும் அபராத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வணிக வரித்துறை அலுவலர்களிடம் அந்தச் சிலிண்டர்கள் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.
தேர்தல் நேரத்தில் ஆவணங்கள் இன்றிப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவது கடும் குற்றமாகக் கருதப்படுவதால், அந்தத் தனியார் நிறுவனத்தின் மீது மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, திருவண்ணாமலையிலும் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. அருணாச்சலேசுவரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், கடந்த 3 ஆண்டுகளாக இலவச லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது. இந்த லட்டுகள் மற்றும் பிற இனிப்புகள் கோவில் நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
ஆனால் தற்போது வணிக பயன்பாட்டு உவிநியோகத்தில் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக லட்டு தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் பணியை கோவில் நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மேலும், முறுக்கு, அதிரசம் போன்ற பிரசாதங்களின் தயாரிப்பும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், விறகு அடுப்பில் மீண்டும் தயாரிக்க அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கேஸ் சிலிண்டர் நிரப்பும் செயல்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர். வீட்டு பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர்களிலிருந்து வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களுக்கு அனுமதியின்றி கேஸ் மாற்றி விற்பனை செய்வது நடந்து வருவதாகவும், இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அபாயம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அரசு அதிகாரிகள் அதிரடி
இந்த முறையில் கருப்பு சந்தை விற்பனையும் நடைபெறுவதால், உண்மையான பயனாளர்களுக்கு சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இத்தகைய சட்டவிரோத நிரப்புதல் முறைகள் வெடிப்பு உள்ளிட்ட ஆபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். கட்டுப்பாட்டு விதிகளை மீறும் இந்த ராக்கெட்டுகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications