கடைசி நாள் நடந்த மிராகிள்.. அப்பாதான் உலகம்! விகேடி பாலன் மகன் பகிர்ந்த தகவல்
சென்னை: பல தொழிலதிபர்களை தனது வாழ்க்கையில் அப்பா உருவாக்கி இருந்தாலும், எனக்குக் குருநாதர் அவர் அல்ல என்று தொழிலதிபர் விகேடி பாலனின் மகன் ஶ்ரீகரன் தெரிவித்திருக்கிறார்.
தனது சொந்த திறமையால் சாதாரண பிளாட் ஃபார்ம் வாழ்க்கையிலிருந்து சர்வதேச டிராவல்ஸ் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் விகேடி பாலன். அவர் எந்தளவுக்கு ஏழ்மை நிலையிலிருந்து உருவானார் என்பதைப் பலர் அறிவார்கள். அதை அவர் பல யூடியூப் பேட்டிகள் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள தொழிலதிபர்களில் ஒருவரான அவர் சாதாரண கதர் துண்டு, வேட்டி என வாழ்நாள் முழுக்க எளிமையாக வாழ்ந்தவர். அவர் மறைந்த செய்தி பலரைப் பாதித்தது. அவரது இறுதி நாட்கள் எப்படி இருந்தன? அதை பற்றி அவரது மகன் ஶ்ரீகரன் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், "கடைசி வரை அப்பாவைக் காப்பாற்றிவிடலாம் என எவ்வளவோ போராடினேன். இறுதியில் பிரைன் ஸ்ட்ரோக் வந்ததும் ஒன்றுமே செய்ய முடியாமல் நிலைகுலைந்து போனோம். அவர் மறைந்த பிறகு பலர் அவரைப் பற்றி விசாரிக்க வருகிறார்கள். வீடு தேடி வரும் பலர் பல துறைகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர் இவ்வளவு பேரைச் சம்பாதித்திருக்கிறார். அதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
அம்மாவைத்தான் இந்த இழப்பிலிருந்து எங்களால் மீட்க முடியவில்லை. அப்பாவின் வெற்றிக்கு அம்மாதான் பெரிய காரணம். சமீபத்தில் அப்பாவுக்கு 70 வயது நிறைவடைந்தது. அதைப் பெரிய விழாவாகக் கொண்டாட நினைத்தோம். அப்பா மறுத்துவிட்டார். அவரது நண்பர்களை அழைத்து அதை நான் செய்திருக்க வேண்டும். அந்த மன உறுத்தல் இப்போது அதிகம் உள்ளது.
கடந்த 7 நாட்களாக அவர் வாட்ஸ் அப்பில் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் முழுக்க தினம் திரும்பத் திரும்பக் கேட்கிறேன். அதைக் கேட்காமல் ஒரு நாள் கூட விடிவதில்லை. அந்தளவுக்கு மனம் காயமாக இருக்கிறது. விகேடி பாலன் என் அடையாளம். அதை மறுக்க முடியாது. அப்பா எப்போதும் முதலாளி போல் நடந்து கொண்டதே இல்லை.
ஒருவர் 5 வருடங்களாக நிறுவனத்தில் வேலை பார்த்தால், அவரே அழைத்து தனியாக தொழில் தொடங்கச் சொல்வார். அதுதான் அவர் கனவு. அதை மனதில் வைத்துத்தான் வருடத்திற்கு 100 பேருக்கு டிராவல்ஸ் பிசினஸ் பற்றிய படிப்பை இலவசமாகச் சொல்லிக் கொடுக்க முடிவு செய்துள்ளோம். அதை அப்பா பெயரிலேயே செய்ய இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், விகேடி பாலனின் இறுதி நாட்கள் எப்படி இருந்தன என்பதைப் பற்றியும் தெரிவித்துள்ளார். அவர், " கடந்த 4 ஆம் தேதி நான் ஜப்பான் போகவேண்டும். நெப்போலியன் மகன் திருமண பயணத்தை நாங்கள்தான் ஒருங்கிணைத்திருந்தோம். அன்று காலை அப்பா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உடனே விமானத்தை ரத்து செய்தேன். ஐசியு உள்ளே போனபோது மயக்கத்திலிருந்தாலும் என் கையை அவர் கெட்டியாகப் பிடித்தார். 2 நாட்களில் அவர் மறுபடியும் மீண்டு வந்தார்.
அவர் வாழ்க்கையில் பல மிராகிள்களை பார்த்தவர். அதேமாதிரி எழுந்து வந்தார். அப்பாதான் படிப்பு என்பது வெறும் பள்ளிக்கூடம் சார்ந்தது இல்லை என்பதை உணர்த்தினார். அனுபவம் என்பது அதைவிடப் பெரிய அறிவு என்பதை புரிய வைத்தவர் அவர். ஒருவர் உதவி என வாய் திறந்து கேட்பதற்கு முன்பே அதைப் புரிந்து கொண்டு செய்துவிடுவார். யாரையும் கேட்கும் அளவுக்குக் காக்க வைக்க மாட்டார்.
பலரை அப்பா முதலாளியாக மாற்றி இருக்கிறார். ஆனால், எனக்குக் குருநாதர் அப்பா இல்லை. நான் வேறு டிராவல்ஸ் மூலம் வேலை கற்றுக் கொண்டேன். அதன்பின் வந்த பிறகு எனக்கு தனி டூரியஸம் கம்பெனி தொடங்கி அதை நிர்வகிக்கச் சொன்னார். அதில் ஒரு வெற்றியை நான் உண்டாக்கினேன். பின்னர்தான் மதுராவை கவனிக்கத் தொடங்கினேன். கடந்த 7 ஆண்டுகளாக நானே இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறேன். அப்பா உண்டாக்கிக் கொடுத்த சாம்ராஜ்ஜியம். அவர் உழைப்பால் இது எனக்கு ஈசியாக கிடைத்தது. கஷ்டப்படாமல் இந்த இடத்திற்கு நான் வந்தேன்.
எனக்கு மட்டும் இல்லை. டிராவல்ஸ் துறையை ஒரு தொழிலாக தமிழ்நாட்டில் உருவாக்கியவர்களில் அப்பாவும் ஒருவர். எனக்கும் சேர்த்துத்தான் அவர் உழைத்திருக்கிறார். அவர் முதல் தலைமுறை தொழில்முனைவோர். நான் அப்படி அல்ல. ஒரு வெற்றியிலிருந்து என் வாழ்க்கை ஆரம்பித்திருக்கிறது" என்கிறார்.












Click it and Unblock the Notifications