'அம்மா' கொடுத்த வாக்குறுதியை எடப்பாடியார் மீறி விட்டார்... கொதிக்கும் அதிருப்தியாளர்கள்!
சென்னை: அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள சில தொகுதிகளை பாமக, பாஜகவுக்கு தூக்கி கொடுத்து விட்டதாக அதிமுக தொண்டர்கள் ஆங்காங்கே போராடி வருவது ஓ.பி.எஸ் -இ.பி.எஸ்-க்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு சில மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று விளங்கிய நிலையில், அவர்களுக்கு சீட் கொடுக்காமல் வெற்றி வாய்ப்பில்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர் என்று விரக்தியுடன் கூறினார்கள் சிலர்.
அம்மாவின் வாக்குறுதிகளை மீறி ஒதுக்கப்பட்டவர்களுக்கு சீட் வழங்கியிருக்கிறார் முதல்வர் எடப்பாடியார் என்று அவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் தேர்தல் களம் றெக்கை கட்டி பறந்து வருகிறது. எதிர்க்கட்சியான திமுக, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடியாததால் வேட்பாளர் பட்டியலை வெளியிட முடியாமல் தவித்து வருகிறது. ஆனால் ஆளுங்கட்சியான அதிமுக, பாமக, பாஜகவுக்கு தொகுதிகளை ஒதுக்கி விட்டு, 177 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. 3 அமைச்சர்களுக்கும், 41 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கும் வாய்ப்பு மறுத்துள்ளது அதிமுக தலைமை.

சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கு சீட் மறுப்பு
சீட் மறுக்கப்பட்டதால் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலர் கடும் விரக்தியில் உள்ளனர். சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்து இந்த விரக்தியை அப்படியே வெளிக் காட்டி விட்டார். இது ஒருபுறமிருக்க அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள சில தொகுதிகளை பாமக, பாஜகவுக்கு தூக்கி கொடுத்து விட்டதாக அதிமுக தொண்டர்கள் ஆங்காங்கே போராடி வருவது ஓ.பி.எஸ் -இ.பி.எஸ்-க்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

பல இடங்களில் போராட்டம்
பூந்தமல்லி(தனி) தொகுதியை பாமகவுக்கு கொடுத்து விட்டதாக அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் கோவை தெற்கு தொகுதி பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட்டதால் , அதிருப்தியடைந்த அ.தி.மு.கவினர் சாலை மறியல் ஈடுபட்டதுடன் கட்சி தலைமைக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள். அமைச்சர் பாஸ்கரனுக்கு சீட் வழங்கப்படாததால் அவரது ஆதரவாளர்களும் தங்களது எதிர்ப்பை காட்டினார்கள். ''வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை நமது ஆட்களுக்கு கொடுக்காமல், மாற்று கட்சியினருக்கு கொடுத்தால் எப்படி வெற்றி பெறுவோம்'' என்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் கூறுகின்றனர்.

எடப்பாடியார் மீது விரக்தி
மேலும், பெயர் வெளியிட விரும்பாத சில நிர்வாகிகள், கட்சி சில அமைச்சர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டதாக தெரிவித்தனர். ''கட்சியில் உண்மையாக உழைத்தவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. ''இவர்களுக்கு எல்லாம் பதவி கொடுக்க கூடாது'' என்று அம்மா சிலரை ஒதுக்கி வைத்திருந்தார். ஆனால் அம்மாவின் வாக்குறுதிகளை மீறி அவர்களுக்கெல்லாம் சீட் வழங்கியிருக்கிறார் முதல்வர் எடப்பாடியார் என்று அவர்கள் தங்களது ஆதங்கத்தை கொட்டினார்கள்.

சலசலப்பை சமாளிக்குமா அதிமுக
கட்சிக்காக காலம், காலமாக உழைத்த ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் பலருக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று விளங்கிய நிலையில், அவர்களுக்கு சீட் கொடுக்காமல் வெற்றி வாய்ப்பில்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர் என்று விரக்தியுடன் கூறினார்கள் சிலர். அதிமுகவில் எழுந்துள்ள இந்த சலசலப்பு வெற்றி வாய்ப்பை பாதிக்கக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த சலசலப்பை தகர்த்தெறிந்து அதிமுக வெற்றியை தக்க வைக்குமா? என்பது மே 2-ம் தேதி தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications