பகீர் மோசடி.. அரசு நிலங்களை அரசே ரூ.200 கோடிக்கு வாங்கிய கொடுமை.. 83 பேரின் வங்கி கணக்கு முடக்கம்!
சென்னை: சென்னை - பெங்களூரு இடையே சுமார் 7,800 கோடி ரூபாய் செலவில் அதி விரைவுச் சாலை என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. சென்னை-பெங்களுரு பயண நேரத்தை குறைக்கும் வகையில் ஆறு வழிச்சாலை கொண்ட இந்த திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை...7 மாநிலங்களில் சதமடித்தது - மும்பையில் 1 லிட்டர் ரூ. 103
தமிழ்நாட்டில் மட்டும் இந்த சாலை பணிக்கு 1,000 ஹெக்டேர் நிலங்கள் தேவைப்படுவதாக கூறிய தேசிய நெடுஞ்சாலைத் துறை பல்வேறு இடங்களில் நிலங்களை பெற்று அதற்குரிய இழப்பீடு தொகையை வழங்கியது.
ரூ.200 கோடி மோசடி
அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பீமன்தாங்கல் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிலம் எடுப்பு பணிகளை செய்துள்ளது. பீமன்தாங்கல் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க கையகப்படுத்தும் நிலங்களுக்கு, நிலங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீடாக 200 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
திடுக்கிடும் தகவல்
அதாவது நிலத்தின் உரிமையாளர்கள் எனக்கூறிய பலபேர் அரசின் அனாதீனம், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை பொய்யான ஆவணங்கள் சமர்ப்பித்து,பட்டா மாற்றி இழப்பீட்டு தொகையை பெற்றுள்ளனர் என்று திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இந்த நில எடுப்பு இழப்பீடு மோசடி குறித்து பாதிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளரான நவகோடி நாராயணன் என்பவர் தமிழக அரசின் நில நிர்வாக ஆணையருக்கு புகார் அளித்தார்.
5 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நில நிர்வாக ஆணையர் இது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விவகாரம் என்பதால் இந்த புகாரை சிபிஐ விசாரிக்க பரிந்துரை செய்தார். இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்,
ரூ.200 கோடி இழப்பீடு வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதால், அப்போது தேசிய நெடுஞ்சாலை களுக்கான நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த நர்மதா உள்ளிட்ட 5 அதிகாரிகள் மீது தற்போது வழக்குபதிவு செய்துள்ளனர்.
வங்கி கணக்கு முடக்கம்
புகார் அளித்த நவகோடி நாராயணனிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பீமன் தாங்கல் கிராமத்தில் அரசு நிலத்திற்கு முறைகேடாக பட்டா பெற்று இழப்பீட்டுத் தொகை பெற்றுக்கொண்ட 83 பெயர்களின் வங்கிக் கணக்குகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறையினர் அந்த 83 பேரின் நில பட்டாக்களையும் ரத்து செய்து, அரசு நிலங்களாக மாற்றி உள்ளனர்.