மாணவர்கள் இடையே சாதி மோதல்.. ‘அரசுப் பள்ளிகளில் தான் பிரச்சனை’ - ‘அழுத்தம்’ கொடுக்கும் பாஜக!
சென்னை : 'அரசுப்பள்ளிகளில் தான் பிரச்சினை' என்பதை மனதில் நிறுத்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கிடையே சாதிய மோதல்கள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது என பாஜக நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்கள் இடையேயான சாதிய மோதல் தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள நாராயணன் திருப்பதி, 'அரசுப்பள்ளிகளில் தான் பிரச்சினை' என அழுத்திக் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ள போக வேண்டி வரும்.. சீண்டிய பாஜக நாராயணன்! முடிஞ்சா தொட்டு பாரு(ங்க)..சீறிய எம்பி செந்தில்குமார்
பள்ளி மாணவர்களிடையே மோதல்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அக்கடவல்லி பேருந்து நிலையத்தில் இரு சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இரு தரப்பினரும் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இதில் 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி மாணவர்கள் சாதி ரீதியாகப் பிரிந்து மோதலில் ஈடுபட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பள்ளிகளில் மோதல்
இச்சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்ட நிலையில், மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். கடந்த ஏப்ரல், 31 அன்று கடலூர் அடுத்த வெள்ளக்கரை வே.காட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைக்குள் மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் எட்டு பேர் காயமடைந்தனர். கடந்த ஜூலை 12ஆம் தேதி கடலூர் மாவட்டம் திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் ஊர் தகராறாக மாறி கடும் மோதலில் முடிந்தது.
அரசுப் பள்ளிகள்
தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கிடையே சாதிய மோதல்கள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்களுக்கிடையே சாதிய உணர்வும், வன்முறை எண்ணமும் தலைதூக்குவது நல்லதல்ல. பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் கொடிய சூழ்நிலை அகற்றப்பட வேண்டும். நடக்கும் மோதல்கள் அரசு பள்ளிகளில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பது ஏன்? முறையான நிர்வாகம், சிறப்பான ஆசிரியர்கள் என்பது தான் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அரசுக்கு கோரிக்கை
தொடர்ந்து நடைபெறும் இந்த அவலத்தை தடுத்து நிறுத்த தீவிர கவனம் செலுத்தி, திறமையான, அனுபவம் வாய்ந்த நல்லாசிரியர்களை அரசுப் பள்ளிகளில் பணியமர்த்த வேண்டும். மாவட்ட நிர்வாகம் இப்படிப்பட்ட இடங்களில் சாதி பதற்றத்தை தணிக்க ஆவண செய்ய வேண்டும். நம் அடுத்த தலைமுறை மாணவர்களின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நாமே பொறுப்பு என்பதை கல்வி துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் உணர்ந்து மாணவர்களை நல்வழிப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
அரசுப்பள்ளி என அழுத்தம்
இதில் அரசியல் கலப்பில்லாது நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து 'அரசுப் பள்ளிகளில் தான் பிரச்சினை' என்பதை மனதில் நிறுத்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.