சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டுமனைப் பட்டா.. பல வருட கனவு நிறைவேறுதா.. அரசு முக்கிய உத்தரவு
சென்னை: சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட மாநில அளவிலான உயர்நிலை குழுவின் முதல் கூட்டத்தில் பேசிய அமைச்சர்கள், பொதுமக்களுக்கு விரைவாக வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே நிலம் வாங்குவதில் அதிக சிக்கல் நிறைந்த பகுதி என்றால் அது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் தான்.குறிப்பாக சொல்வது என்றால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தான் நிலம் வாங்குவதும், அதற்கு பட்டா வாங்குவதும் சவாலானது ஆகும். மிககவனமாக இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஏனெனில் சென்னை என்பது ஒரு காலத்தில் ஏரிகளின் நகரம், சென்னையை சுற்றிலும் நீர் நிலைகள் மிகமிக அதிகம்.

பழைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த ஏராளமான ஏரிகளை அழித்தே வீட்டு மனைகளும், குடியிருப்புகளும் உருவாகின. பள்ளிக்கரணை, பரங்கிமலை, ஆவடி, தாம்பரம், முடிச்சூர், நாவலூர் இந்த பகுதிகள் எல்லாம் 40 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தது. 20 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தது. தற்போது எப்படி உள்ளது என்பதை பார்த்தாலே இந்த வில்லங்கம் புரியும். பல நீர்நிலை பகுதிகள் வீடுகளாகவும், நகரங்களாகவும் உருமாறிவிட்டன.
ஓஎம்ஆர் பகுதியில் ஏற்பட்டஐடி நிறுவனங்களின் வளர்ச்சி, தென்சென்னையின் நிலமதிப்பை வரலாற்றில் இல்லாத அளவிற்கு புரட்டி போட்டது. அதன் எதிரொலியாக அடையாறு முதல் நாவலூர் வரையிலும், அதற்காக அமைக்கப்பட்ட 200 அடி சாலையான பள்ளிக்கரணை முதல் பல்லாவரம் வரையிலும் நிலத்தின் மதிப்பு கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு உயர்ந்தது இதேபோல் பல்லாவரம் முதல் குன்றத்தூர் வரையிலும், அந்த பக்கம் பூந்தமல்லி, திருவள்ளூர் வரையிலும், இந்த பக்கம் பொன்னேரி வரையிலுமே நிலத்தின் மதிப்பு வேறுவடிவம் தொட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. சென்னையின் முக்கிய பகுதியான கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் வந்த பின்னர், செங்கல்பட்டு வரையிலும், அந்த பக்கம் வண்டலூர் கேளம்பாக்கம் சாலையிலும் நிலத்தின் மதிப்பு பல இடங்களில் புதிய உச்சம் தொட்டுள்ளது.
இதன் காரணமாக நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, போலி ஆவணங்கள் மூலம் நிலம் ஆக்கிரமிப்பு, அரசு நிலம் ஆக்கிரமிப்பு, அனாதீன நிலம் ஆக்கிரமிப்பு, ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு, நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பு என அதிகாரத்தின் துணையுடன் பலர் நிலத்தை வளைத்தார்கள்.. அதை பலருக்கு விற்றும் விட்டார்கள். இப்போதும் அந்த நிலங்கள் எல்லாம் சிக்கலில் தான் இருக்கின்றன. என்றாவது ஒரு நாள் அதில் சிக்கலான இடங்கள் அரசால் பறிமுதல் செய்யப்படும். பல இடங்களுக்கு இன்று வரை பட்டா வழங்கப்படவில்லை.. பத்திரம் மட்டுமே பதியும் நிலை இருக்கும்.. பட்டாவை அவ்வளவு எளிதாக வாங்க முடியாத நிலை இருக்கிறது. அதேநேரம் சிக்கல் இல்லாதவர்களுக்கு விரைவில் பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க போகிறது.
இந்நிலையில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட மாநில அளவிலான உயர்நிலை குழுவின் முதல் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது.
இதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் பங்கேற்றார்கள். இக்குழுவில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட வேண்டியுள்ள பொதுமக்களுக்கு விரைவாக பட்டா வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர்கள் அறிவுரைகள் வழங்கினார்கள்.












Click it and Unblock the Notifications