விஜய் அரசியலுக்கு வந்த உண்மையான காரணமே வேறு! பழ கருப்பையா கொடுத்த அந்த 200 கோடி விளக்கம்!
சென்னை: விஜய் ஏதோ 200 கோடி சம்பளத்தைவிட்டுவிட்டு தியாகம் செய்து அரசியலுக்காக வந்திருப்பதைப் போல் பேசுவது சரியான அணுகுமுறையாக இல்லை என்று பழ கருப்பையா தெரிவித்துள்ளார்.
விஜய் கட்சி தொடங்கி இருப்பது தொடர்பாகக் கருத்துச் சொல்பவர்கள் பலரும் 200 கோடி சம்பளத்தைவிட்டுவிட்டு வந்திருக்கிறார் என்றே பெருமையாகப் பேசி வருகிறார்கள். அவரும் தான் மிகப்பெரிய சினிமா வாழ்க்கையைத் தூக்கி எறிந்துவிட்டு வருவதாகவே விக்கிரவாண்டி மாநாட்டில் பேசி இருந்தார். தான் நடிக்க வந்த போது விமர்சித்தவர்கள் பின்னால் தன்னை ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்லி இருந்தார். இவரை மட்டும் அல்ல பலரையும் ஆரம்பக் கட்டத்தில் இந்த உலகம் விமர்சித்துத்தான் இருக்கிறது. யாருக்கும் வந்த உடனேயே சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கவே இல்லை. இவருக்கு சினிமாவிற்குள் நுழைய அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பல லட்சங்களைச் செலவு செய்தார். படிப்படியாக அவரை உயர்த்த பல படங்களை எடுத்து வெளியிட்டார்.

ஆனால், ஏதோ முகவரியே இல்லாமல் சினிமாவுக்குள் நுழைந்த வெற்றி பெற்றவரைப் போல விஜய் இன்று ஒரு தோற்றத்தை உண்டாக்க முயற்சி செய்கிறார். அதைப் பற்றியும் விஜய் மாநாடு பற்றியும் பல விசயங்களைப் பேசி இருக்கிறார் பழ கருப்பையா. இது பற்றிப் பேசும்போது, "மிகப்பெரிய சினிமா செட் போல மாநாட்டிற்குப் போட்டிருந்தார் விஜய். இன்னும் அவரைவிட்டு சினிமா பாதிப்பு முழுமையாகப் போகவில்லை. அவ்வளவு செலவு செய்திருக்கத் தேவையில்லை. இன்றைக்கு தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அந்தநேரம் பார்த்து விஜய் வருகிறார். ஆகவே, அவரது அரசியல் வருகை சரியானது.
திமுகவை எதிர்க்க வேண்டிய நல்ல கட்சிகள் எல்லாம் அவர்களின் கூட்டணிக்குள் சென்றுவிட்டன. ஆகவே யாரும் எதிர்க்க தயாராக இல்லை. விசிக, கம்யூனிஸ்ட் எல்லாம் திமுகவிடம் பணிந்து போய்விட்டன. ஊழல் இன்று திமுக ஆட்சியில் கட்டுப்பாட்டை மீறிப் போய்விட்டது. ஒருவர் ஊழல் செய்துவிட்டு சிறைக்குப் போகிறார். அப்போதும் மந்திரியாக இருக்கிறார். வெளியே வந்தவுடன் உடனே மந்திரியாகப் பதவியேற்கிறார். இதுவே திமுக நிலைப்பாடாக இருக்கிறது. இதை எதிர்த்து ஒரு கட்சி வந்தால், அதை நான் வரவேற்பேன். இது முதல்நிலை.
ஆனால், விஜய்யிடம் இன்னும் தெளிவான அரசியல் இல்லை. நான் 200 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு வருகிறேன் என்கிறார். உங்களை யார் வர சொன்னார்கள். மக்கள் சேவைக்கு வருபவர் அதைச் சொல்லக்கூடாது. உண்மையைச் சொன்னால் புகழ், செல்வாக்கைப் பார்த்துவிட்டோம். அதிகாரத்தையும் அனுபவிப்போம் என்று வருகிறார். அதைத் தியாகம் போல் சொல்லக் கூடாது. பிறப்புக்கும் எல்லா உயிருக்கும் என்று சொல்கிறார். ஆனால், அவர் மாநாட்டில் வைத்துள்ள கட் அவுட் எல்லாம் சாதிவாரியாக இருக்கிறது என்று பலர் விமர்சிக்கிறார்கள். நானும் கேட்கிறேன், வேலு நாச்சியாருக்கு இந்திய அரசியல் ஜனநாயகத்தில் அவரது பங்களிப்பு என்ன? அவர் ஆங்கிலேயர் காலத்து விடுதலைப் போராட்ட வீரர். அவரை ஜனநாயக அரசியலின் அடையாளமாக ஏன் முன் வைக்கிறார்?
பேச்சுரிமை, எழுத்துரிமை, உயிர்வாழ்வதற்காக உரிமை, தொழிலாளர் சங்க உரிமை என அம்பேத்கர் கொடுத்த சட்ட உரிமைகளையே தூக்கி எறிந்துவிட்டார்கள். அதைக் கேட்பதற்கு யாரும் இல்லை. நீதிமன்றமே அதை ஏற்றுக் கொண்டுவிட்டது. அம்பேத்கரை வழிகாட்டியாகக் கொள்வதும் பெரியாரைத் தலைவராக ஏற்பது தவறில்லை. காமராஜரின் ஆட்சியை லட்சியமாக வைப்பதும் சரிதான். இங்கே வேலு நாச்சியாரும் அஞ்சலை அம்மாளும் எங்கே வந்தார்கள்?
இட ஒதுக்கீடு பற்றியும் சாதிவாரியா பிரதிநிதித்துவம் பற்றியும் விஜய் பேசுகிறார். உண்மை நிலை என்ன? கடந்த 20 ஆண்டுகளாகப் பள்ளிக் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள். வெறும் 20 ஆயிரம் சம்பத்திற்கு வேலை பார்க்கிறார்கள். பேருந்து போக்குவரத்துக் கழகத்தை அரசு நடத்துகிறது. சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்று ஓட்டுநர், நடத்துநரை ஒப்பந்தத்தில் அமர்த்தி வேலை வாக்குகிறது. இதில் எப்படி இடஒதுக்கீடு கிடைக்கும்? எப்படிக்கொடுக்க முடியும்? அதை விஜய் பேச வேண்டாமா? கேள்வி கேட்க வேண்டாமா? வெறும் சாதிரீதியான தலைவர்களுக்கு கட் அவுட் வைத்தால் போதுமா?
எனக்குத் தெரிந்து விஜய் வருகையால் சீமான்தான் பாதிக்கப்படுவார். அவர் பின்னால் போவதைவிடக் கவர்ச்சியாக இருக்கும் விஜய் பின்னால் போகலாம் என்று பலர் இந்தப் பக்கம் வந்துவிடுவார்கள். விஜய்யிடம் தெளிவு இல்லை எனச் சீமான் சொல்கிறார். இவர் என்ன தெளிவாகக் கொள்கையை முன்வைத்துப் பேசிவிட்டார்? சீமானே மாற்றி மாற்றித்தானே பேசுகிறார்? இங்குள்ள தமிழர்களிடம் கத்தியைக் கொடுத்து சிங்களவர்களைக் கொண்டு விட்டு வரச்சொல்வேன். ஆடு மேய்பவனை எல்லாம் அரண்மனைக்குக் கொண்டு போவேன் என்று சீமான் பேசுவது எல்லாம் ஒரு பேச்சா? கொள்கையா? அந்தக் கட்சி தமிழ்நாட்டுக்கு வந்த கேடு. இங்கே யாரும் அறிவு உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் அரசியல் அறிவு குறைந்துபோய் விட்டது.

அறிவாளிதான் டாக்டர் ராமதாஸ். எந்தப் பிரச்சினை பற்றியும் தெளிவாக பேசக்கூடியவர். சாதிக்குள் அவர் முடங்கிப் போய்விட்டார். கடந்த 30 ஆண்டுகளாக 5% வாக்குகளை அவரால் தாண்ட முடியவில்லை. 4 சீட்டுதான் வைத்துள்ள திருமாவளவன். அவர் துணை முதல்வர் கேட்கிறார். 40 சீட்டுவைத்திருந்தால் கேட்கலாம். எனவே ராமதாஸ், திருமாவளவனை எல்லாம் விஜய் அரவணைத்து அதிக சீட்டுகளைத் தருகிறேன் என்று சொன்னால் போய்விடுவார்கள்.
அதிமுக விஜய்யை முதல்வராக ஏற்காது. எடப்பாடி முதல்வர் விஜய் துணை முதல்வர் என்றால் அந்தக் கட்சி வரலாம். அதுவும் கூட விஜய் தனது வாக்குவங்கி என்ன என்பதை நிரூபிக்கவில்லை. அதற்குள் யாரும் விஜய்யை நம்பி வருவார்களா எனப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும். தேர்தல் நேரத்தில் வேறு வழி இல்லை என்றால் விஜய்யுடன் அதிமுக உறவு வைத்துவிடும். அதைவிட்டால் வேறு வழியில்லை. உடனே திமுக அவர்களை பாஜக பி டீம் என்று சொல்லும். திமுகவை எதிர்த்தாலே உடனே பிஜேபி ஆள் என்று திமுக முத்திரை குத்த பார்க்கிறது. திமுகவை எதிர்க்கிறவர்கள் எல்லாம் பாஜகவின் கள்ளப்பிள்ளைகளா? இது என்ன நியாயம்?












Click it and Unblock the Notifications